திருச்சியில் மத்திய கல்வி அமைச்சகம் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் என்.ஐ.டி கல்லூரியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மாணவியிடம் அத்துமீறல்


மாணவியின் அறைக்கு வந்த ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் இண்டர்நெட் சரி செய்வதாக சொல்லி, அங்கு இருந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். அதோடு, பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒட்டுமொத்த மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளது திருச்சியை உலுக்கி உள்ளது.


மாணவியை குறை சொன வார்டனை நீக்க வேண்டும்


விடுதி அறைக்கு சென்ற ஒப்பந்த ஊழியர் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்தது தொடர்பாக மாணவி தொடர்புடைய ஹாஸ்டல் வார்டனிடம் சொன்னபோதும் அவர் திருப்பி அந்த மாணவியை குறை சொன்னதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, அந்த வார்டனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் விடுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறி இரவு முதல் மாணவிகளும் மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ஒருவர் கைது


இந்த விவகாரத்தில் விடுதிக்கு ஒப்பந்த ஊழியராக வந்த அந்த நபர் திருச்சி காவல்துறையால் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. வார்டனை நீக்க வேண்டும் என்று மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மாணவி எழுதிய கடிதம் வாட்ஸ்-அப்பில் பரவியது


பாதிக்கப்பட்ட மாணவி எழுதிய கடிதம் திருச்சி என்.ஐ.டி. மாணவர்களின் வாட்ஸ்-அப் குழுக்களில் பரவியதே ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களும் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட காரணம் என கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் தன்னுடிய அறைக்கு தொடர்பில்லாத ஆண் ஒருவர் வந்ததாகவும், அவர் தன்னை இண்டர்நெட் வொய்ஃபை சரி செய்யும் ஒப்பந்த ஊழியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, தொழில்நுட்ப வேலை செய்வதுபோல், தன்னை பார்த்து ஆபாச சைகை காட்டியதாகவும், தன்னுடைய ஆண் உறுப்பு தெரியும்படி அவர் நெளிந்துகொண்டு தன்னை பாலியல் ரீதியாக துன்புறித்தியதாகவும் அந்த கடித்தத்தில் அந்த மாணவி பரபரப்பாக எழுதியுள்ளார். ஒரு கட்டத்தில் அதனை சகித்துக்கொள்ள முடியாமல் வெளியில் சென்று வார்டனிடம் புகார் அளித்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


அலட்சியமான வார்டன் - ஆவேசமான மாணவி


மாணவிக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து வார்டன் பெரிதாக அல்ட்டிக்கொள்ளவில்லையென்றும் இதற்கு தான் தான் காரணம் என்பது மாதிரி பாதிக்கப்பட்ட மாணவி பக்கமே பழியை தூக்கி போடும் வகையில் செயல்பட்டு தன்னை மன ரீதியாக அவர் துன்புறுத்தியதாகவும் ஆங்கிலத்தில் அந்த மாணவி உருக்கமாக தெரிவித்துள்ளார். அதேபோல், பாலியல் கொடுமைகளுக்கு இன்னும் எத்தனை நாட்கள் தான் பெண்களையே காரணம் சொல்வீர்கள் என்றும் அந்த கடிதத்தில மாணவி ஏக்கத்துடன் கேட்டுள்ளார். 


களத்திற்கு வந்த திருச்சி எஸ்.பி. வருண்குமார் - பேச்சுவார்த்தை


மாணவர்கள் போராட்ட களத்திற்கு வந்துள்ள திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.  இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் விடுதி வார்டன் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்ததோடு மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட மாணவியிடன் பெண் காவல் அதிகாரியை வைத்தே விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.