திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளும், வெளிநாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியை பயின்று வருகின்றனர்.


அப்படி பயின்று வரும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியும் வெளியில் அறைகள் எடுத்து தங்கியும் கல்வியை கற்று வருகின்றனர். இந்த நிலையில் என்.ஐ.டி கல்லூரி மகளிர் விடுதியில் மின்சார பிரச்சனை குறித்து பழுது பார்ப்பதற்காக என்.ஐ.டி கல்லூரியில் ஒப்பந்த பணியாளராக வேலைக்கு கதிரேசன் என்பவர் சென்றுள்ளார். அப்பொழுது விடுதியில் அறையில் மாணவி ஒருவர் படித்துக் கொண்டு இருந்துள்ளார்.


அப்பொழுது அவரை தனியே பார்த்த அந்த எலக்ட்ரீசியன் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறிகளில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி கூச்சலிட்டு கொண்டு வெளியே ஓடி வந்ததோடு இச்சம்பவம் குறித்து சக மாணவ, மாணவிகளிடம் கூறியுள்ளார். மேலும் தனது பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.


அதன் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து உடனடியாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த எலக்ட்ரீஷனை அதிரடியாக கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.


இந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கையும், விடுதி வார்டனின் பொறுப்பின்மையையும் கண்டித்து சக மாணவ,மாணவிகள் விடுதியின் முன் திரண்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும், இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு (பொறுப்பு) முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் மற்றும் துவாக்குடி போலீசார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் என்.ஐ.டி கல்லூரி வளாகத்திற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்.ஐ.டி கல்லூரியில் விடுதியில் தங்கி படித்த மாணவி ஒருவர் கல்லூரி விடுதி வார்டனுக்கு தெரியாமல் இரண்டு நாட்களாக வெளியில் சென்று தனது ஆண் நண்பருடன் சுற்றிவிட்டு வந்த பொழுது அந்த மாணவி அப்பகுதியில் சென்ற ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.