தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து பாலியல் ரீதியாக குற்ற சம்பவங்கள் வெளிவரும் நிலையில் திருச்சி தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக மருத்துவர் துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி மாநகர் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியராக கிரேஷ் சகாயராணி பணிபுரிந்து வருகிறார்.


இந்த நிலையில் தலைமை ஆசிரியர் கிரேஸ் சகாயராணி என்பவரது மகன் சாம்சன் லால்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக உள்ளார். 


மேலும், தாய், பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருப்பதால், அவ்வப்போது, சாம்சன் டேனியல், பள்ளி விடுதிக்கு சென்று வருவதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.




இதனை தொடர்ந்து, குழந்தைகள் உதவி மையம் 1098 எண்ணிற்கு புகார் வந்ததன் அடிப்படையில், திருச்சி மாவட்ட சமுக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த கோட்டை காவல் நிலையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இந்த புகாரை அடுத்து சாம்சங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, கோட்டை அனைத்து மகளிர் பெண் காவலர்கள் சம்பவம் நடைபெற்ற பள்ளியில் சக பள்ளி குழந்தைகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர். 


மேலும் விசாரணை மேற்கொண்ட போலீசார் கூறுகையில்.. 


பாதிக்கப்பட்ட மாணவிகள், தலைமை ஆசிரியையின் மகன் என்பதால், வெளியே சொல்வதற்கு தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. அவரது அத்துமீறல் அதிகரிக்கவே, பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர் மற்றும் வார்டன் ஆகியோரிடம் தெரிவித்தனர். விசாரணையில், சாம்சன் டேனியல் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. 


மேலும், குற்றத்தை மறைத்ததாக கூறி பள்ளி தலைமை ஆசிரியை கிரேஸ் சகாய ராணியையும் நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். சாம்சன் டேனியில் சிகிச்சைக்கு வந்த பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாரா என விசாரணை நடக்கிறது.