திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திமுக தெற்கு மாவட்ட சார்பாக  நடைபெற்ற நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது.. 


தேசிய கல்விக் கொள்கை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டோம் என தெரிவித்தார்.


மேலும், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மட்டுமல்லாமல் தமிழக அரசின் தலைமை செயலாளர் மூலமாகவும் மத்திய அரசுக்கு தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியுள்ளோம் என்றார்.


மேலும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த கல்விக் கொள்கையில் எங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் உள்ளன என தெரிவித்தார். குறிப்பாக 3ம் வகுப்பு,  5ம் வகுப்பு, 6ம் வகுப்பு, 8ம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு பொது தேர்வு என்பதை எங்களால் ஏற்கவே முடியாது என தெரிவித்தார்.


மேலும் மும்மொழிக் கொள்கை என்ற பெயரால் சமஸ்கிருதம் மற்றும் இந்தியை திணிக்கும் முயற்சியையும் ஏற்க மாட்டோம். குருகுல கல்வி முறையை நடைமுறைப்படுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என உறுதயாக  பேசினார். 




தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்


மேலும், இது தொடர்பாக மாநில அரசு அமைந்துள்ள கமிட்டியின் அறிக்கையின்படியே செயல்படுவோம் என மத்திய அரசிடம் தெளிவாக கூறியுள்ளதாக தெரிவித்தார். மேலும் நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக உள்ளோம் என்றார்.


கொள்கையை விட்டுக் கொடுத்து தமிழகத்திற்கான ஒருங்கிணைந்த கல்வி திட்ட நிதியை பெறுவதில் விருப்பமில்லை. ஆகவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.


அமெரிக்கா சென்றிருக்கும் முதல்வர் தினமும் தொலைபேசியில் அழைத்து இது குறித்து கேட்டு வருகிறார். ஆகவே அவரது உத்தரவின்படியே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.


தமிழக அரசு பாடத்திட்டத்தை விமர்சித்துள்ள தமிழக ஆளுநர் ஆர். என்.  ரவி அவர்களுக்கு, பதில் கூறும் வகையில் பேசி அமைச்சர் அன்பில் மகேஷ்.. மத்திய அரசு பாடத்திட்டத்தை விட மாநில அரசு பாடத்திட்டம் சிறந்தது என்பதை தமிழக மாணவர்கள் மூலம் நிரூபிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.


தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களுக்கு செல்லும்போதெல்லாம் அங்க போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மாநில பாடத்திட்ட புத்தகங்களை கேட்கின்றனர். ஏனெனில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத் தேர்வில் மாநில அரசு பாட புத்தகங்களில் இருந்து பல கேள்விகள் கேட்கப்படுவதாக கூறுகின்றனர்.


ஆகவே ஆளுநர் தன்னுடன் நூலகங்கள் ஆய்வின் போது வந்தால் தமிழகத்தில் எந்த ஒரு நூலகத்திற்கும் அழைத்துச் சென்று தமிழக பாடத்திட்டம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை விட சிறப்பாக இருப்பதை மாணவர்கள் மூலம் நிரூபிக்க தயாராக உள்ளேன் என்றார்.