திருச்சியில் ஆவின் பால் விநியோகம் செய்யும் வாடகை வேன் உரிமையாளர்கள் போராட்டம்


திருச்சி மாநகர் கொட்டப்பட்டு பகுதியில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால் பண்ணையில் இருந்து திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் வாடகை வீடுகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வேன்களுக்கு கடந்த சில மாதங்களாகவே வாடகை தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


இந்நிலையில் திருச்சி ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் 44 வேன்களின் உரிமையாளர்கள் திடீரென்று நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், கடந்த சில மாதங்களாக எங்களுடைய வாடகை முழுமையாக தரவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி வேன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 


இந்த போராட்டத்தால் திருச்சி மட்டும் அல்லாமல் பல்வேறு பகுதி ஆவின் பால் விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆவின் பால் பண்ணை நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.




வாடகை வேன்களுக்கு நிலுவை தொகையை இன்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இன்று மாலைக்குள் நிலுவை தொகையை செலுத்தவில்லை என்றால், மீண்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம் என வேன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


இதனை தொடர்ந்து வேன் உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இருப்பினும் இன்று காலை ஆவின் பால் விநியோகம் பால் பாக்கெட் சரியாக விநியோகிக்க படாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


திருச்சியில் ஆவின் பால் தட்டுபாடு -  பொதுமக்கள் கருத்து


திருச்சியை பொறுத்தவரை இன்று ஆவின் பால் பாக்கெட் தட்டுப்பாடு ஏற்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தினந்தோறும் மக்கள் பயன்படுத்தும் ஆவின் பால் பாக்கெட் விற்பனை இன்று நிறுத்தப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்ததுள்ளது. 


பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் பால் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த வகையில் வழக்கமாக இன்று கடைகளுக்குச் சென்று பால் பாக்கெட் வாங்க சென்றபோது கடை உரிமையாளர் இன்று ஆவின் பால் பாக்கெட் வேன் வரவில்லை என கூறினார்.




இதனைத் தொடர்ந்து மற்றொரு பகுதிகளுக்கு சென்று பால் பாக்கெட் கேட்டால் அங்கேயும் ஆவின் பால் பாக்கெட் விற்பனை செய்யும் வேன் வரவில்லை என கூறினர். என்ன காரணம் என்று தெரியவில்லை. 


சிறிது நேரம் கழித்து திருச்சி மட்டுமல்ல அருகில் உள்ள சில மாவட்டங்களுக்கும் திருச்சி ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பால் பாக்கெட் எடுத்து செல்லும்  வாடகை வேன்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையான வாடகையை ஆவின் நிர்வாகம் தரவில்லை, என திடீரென்று வேன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. 


ஆவின் நிர்வாகம் மக்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருளான பால் விநியோகம் செய்யும், வாடகை வேன்களுக்கு முறையாக வாடகையை செலுத்தி இருக்க வேண்டும். ஏன் காலதாமதம் படுத்தினார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். 


மாநில அரசு ஆவின் நிர்வாகத்தில் நடைபெறக்கூடிய சிக்கல்களை உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் பால் இனி வரும் காலங்களில் தட்டுப்பாடு ஏற்படாமல் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்