திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் சில பயணிகள் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இதைத்தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதிக அளவில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று முன்தினம் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த திருவள்ளூரை சேர்ந்த ஷேக் அப்துல் காதர்(வயது 43) என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தனியாக அழைத்து சென்று அவரையும், அவரது உடைமைகளையும் சோதனை செய்தனர். இதில் அவர் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு 'ஸ்கூட்' விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த அபூசலி(41) என்ற பயணி தான் கொண்டு வந்த எலக்ட்ரானிக் பொருட்களில் தாமிர கம்பி வடிவில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, 2 பயணிகளிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவங்களில் 2 பயணிகளிடமும் இருந்து மொத்தம் 1 கிலோ 516 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.86 லட்சத்து 13 ஆயிரம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

 



 

இதேபோல்  திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு  துபாயில் இருந்து இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தனியே அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது கனி (வயது 42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடைமையை சோதனை செய்தபோது, அதில் தங்கத்தை சங்கிலிகளாகவும், பசை வடிவிலும் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதில் மொத்தம் 839 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் மதிப்பு ரூ.47 லட்சத்து 67 ஆயிரம் என்றும் தெரிகிறது. மேலும் அதே பயணி தனது உடைமைகளில் மறைத்து கடத்தி வந்த எலக்ட்ரானிக் பொருட்கள், விலை உயர்ந்த செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் ரூ.51 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலான கடத்தல் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண