திருச்சி மாவட்டம், சர்க்கார் பாளையம் பனைய குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் என்கிற கொம்பன் (வயது 30). ரவுடியான இவர் மீது திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்பட 53 வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கொம்பனை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் சமயபுரம் அருகே சனமங்கலம் காட்டுப்பகுதிகள் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையிலான போலீசார் பிடிக்க முயன்றனர்.

Continues below advertisement

அப்போது போலீஸ் மீது தாக்குதல் நடத்திய ரவுடி கொம்பனை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கொம்பன் ஜெகன் பலியானார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கொம்பன் ஜெகனின் தாய், தந்தை, மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் விசாரணை நடத்தினர். பின்னர் கொம்பன் ஜெகனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து இரவு 9:45 மணி அளவில் உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

Continues below advertisement

திருச்சி அரசு மருத்துவமனையில் ரவுடி கொம்பன் ஜெகன் உடலை பெற்று உறவினர்கள் திடீர் பிரச்சினையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரவுடி ஜெகன் நண்பர்கள் கூச்சலிட்டனர் அதே சமயம் அவருடைய உறவினர்களும் கூச்சல் சத்தம் இட்டதால் காவல்துறையுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கும் ரவுடி ஜெகன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் கிட்டத்தட்ட 30 நிமிடம் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

இதையடுத்து அவரது இறுதிச்சடங்கு திருச்சி சர்க்கார் பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. அங்கு உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் போலீசாரின் பலத்த பாதுகாப்போடு உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருச்சி ஓயாமரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே ஜெகனின் தாயார் சரஸ்வதி கூறும்போது, எனது மகன் கடந்த 2 ஆண்டுகளாக எந்த தவறும் செய்யாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக  ஆஜராகி  வந்தான். 

இருப்பினும் போலீசார் அடிக்கடி தொந்தரவு கொடுத்தனர். அவனை ரவுடியாக்கியது போலீசார் தான். அவன் தவறே செய்திருந்தாலும் அவனுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று கொடுத்திருக்க வேண்டும். போலி என்கவுண்டர் மூலம் சுட்டு கொன்றுவிட்டனர். இதற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என கூறினார். அதேபோன்று கொம்பனின் மனைவி ஆர்த்திகா மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளார். கள்ளர் முன்னேற்ற சங்கமும் நீதி விசாரணை கோரி உள்ளது.