திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பார்வை இழந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில நல்ல உள்ளங்களால் உருவாக்கப்பட்டதுதான் ஆர்பிட் தொழிற்சாலை ஆகும். கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்த தொழிற்சாலையில்  முதன் முதலில்  5 கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை கொண்டு இயக்கப்பட்டது. பின்பு காலப்போக்கில் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்து வருந்தனர்.


ஆரம்ப காலகட்டத்தில் சிறிய அளவில் சோப்பு, பென்சில், சாக்பீஸ் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வந்தனர். பின்பு  சில நிறுவனங்களுடன் கைகோர்த்து பல உதிரி பாகங்களை தயாரித்து அனுப்பியது. குறிப்பாக பெல் நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இணைந்து ஆண்டுதோறும் உருவாக்கி அனுப்பி வைத்து வருகிறார்கள். தமிழகத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஆங்காங்கே ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் சாலையோரங்களில் யாசகம் பெற்று வாழ்ந்துவரும் நிலையில், தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இந்த தொழிற்சாலை உருவாக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், எங்கள் வாழ்வில் மாற்றத்திற்கும் மிக உதவியாக இருந்ததாக தெரிவித்தனர் .





கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றால் எந்தவிதமான டெண்டர்களும் சரியாக வராததால் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆகையால்  காலப்போக்கில் 100க்கும் மேற்பட்ட  மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய வேலையில் இருந்து விலகி சென்றனர். இதற்கு முக்கிய காரணம்  ஆண்டுதோறும்  சில நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் டெண்டர்கள் முறையாக இத்தொழிற்சாலைக்கு வழங்கப்படவில்லை அதனால் வருமானமும் இல்லை என மன வருத்தத்துடன் தெரிவித்தனர். மேலும் கொரோனா தொற்று காரணத்தினால் எந்த விதமான டெண்டரும் கிடைக்காததால் எங்களுடைய வாழ்க்கை மிகவும் கேள்விக்குறியாகவே உள்ளது என கூறினர். இதுகுறித்து ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது இரு கண்களையும் இழந்து வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நின்றபோது இந்த தொழிற்சாலை தான் எனக்கு  ஒளிவிளக்காய் இருந்தது.


முதலில் இங்கு வரும்போது எனக்கு எந்த ஒரு வேலையும் தெரியாது. தொடக்கத்தில் ஒரு வருடம் பயிற்சி வழங்கினார்கள்.  அதன்பின்பு இங்கேயே எனக்கு வேலை போட்டுக்கொடுத்தார்கள். இதனால் என் பிள்ளைகளை படிக்க வைப்பதும், உணவு, இருப்பிடம் என்று அனைத்தையும் என்னால் பூர்த்தி செய்ய முடிந்தது. எங்களால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கிய இடம் இதுதான் என்றனர்.





ஆனால் தற்போது நிச்சயமில்லாத சூழல் உள்ளதால் மீண்டும் நாங்கள் பழைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கிறோம் எங்களுக்கு இந்த அரசாங்கம் உதவி செய்யுமாறு கையெடுத்து கேட்டுக்கொள்கிறோம் என்றனர் . மாற்றுத்திறனாளியாக நாங்கள் இருந்தாலும் உழைத்து வாழ வேண்டும்,  எங்களுடைய சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் ஆகும் என்றனர். மேலும் எங்களுக்கு சலுகைகள், நிவாரணம் வேண்டாம் இந்த தொழிற்சாலைக்கு அரசாங்கத்தால் முடிந்த சிறிய அளவிலான டெண்டர்கள் கொடுத்து கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கான வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.