திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 


தொடர் நடவடிக்கை:


குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மாவட்ட தோறும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களை உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல்துறை ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


குறிப்பாக  திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மணப்பாறை உட்கோட்டத்திற்கு உதவி ஆய்வாளார் லியோனி ரஞ்சித்குமார் தலைமையில் வீரபாண்டி ஷாகுல் ஹமீது, மற்றும் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கபட்டு இருந்தது.


லஞ்சம் வாங்கிய தனிப்படை போலீசார்:


இந்நிலையில் தனிப்படையினர் கடந்த, 09 ஆம் தேதி, வளநாடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னகோனார்பட்டியில் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சட்டவிரோதமாக ஏர் கன் (Air Gun) ஒன்றினை வைத்துக்கொண்டு பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த  சதாசிவம், ராமசாமி மற்றும் நாகராஜ் ஆகியோர்களை தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர்.




 


அப்போது  3 பேர் மீது  வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக, அவர்களிடம் போலீசார்  ஒரு லட்சம் பணம் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பணத்தினை வளநாடு கைகாட்டியில் உள்ள ஏரிக்கரைக்கு அருகில் அன்று மாலையே சதாசிவம் என்பவரின் உறவினர் விஜயகுமார் மூலம் தனிப்படையினர் பணம் பெற்றுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உதவி எண். 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் கிடைத்தது.


சஸ்பெண்ட்:


மேலும் இந்த  சம்பவம் குறித்து விசாரணை நடத்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்,  மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடட்டார். இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட தனிப்படை போலீசாரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 


இந்த விசாரணையில் தனிப்படை போலீஸ் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 3 பேர் மீதும்  3 பிரிவின் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், உதவி ஆய்வாளர் லியோனி ரஞ்சித்குமார், உட்பட 3 காவலர்களையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சஸ்பெண்ட்  செய்து உத்தரவிட்டார். 


மேலும், இதுபோன்ற குற்றசெயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.