திருச்சியில் ஒரு சா-பதிவாளர் நூறு கோடி வரை சொத்துக்கள் சேர்த்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கும் அவரது மனைவிக்கும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.


1989 கால கட்டத்திலேயே கோடி கணக்கில் சொத்துக்கள் சேர்ப்பு


திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்கார் பேட்டை, பில்லாதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் மகன் ஜானகிராமன் (79), இவர் சார்பதிவாளராக பணிபுரிந்தவர். இவர் சார்பதிவாளராக பணிபுரிந்த (1989-1993) காலத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக பொறுப்பு வகித்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் மேற்கண்ட இடங்களில் இவர் பணிபுரிந்த போது, அவரது வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில் இவரது பெயரிலும், இவரது மனைவி வசந்தி (65) பெயரிலும் வாங்கிக் குவித்த சொத்துக்களின் அப்போதைய மதிப்பு ரூ.32,25,532/- (ரூபாய் முப்பத்து இரண்டு லட்சத்து இருபத்து ஐந்தாயிரத்து ஐநூற்று முப்பத்து இரண்டு) அதாவது அவரது வருமானத்திற்கு அதிகமாக 98%  அளவிற்கு சொத்துக்களை சேர்த்துள்ளார். 




ஊழல் தடுப்பு போலீசாரிடம் சிக்கிய சப் ரிஜிஸ்ட்ரார்


இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததன்பேரில், கடந்த (17.08.2001) அன்று அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவில் காவல் ஆய்வாளர் அம்பிகாபதியால் வழக்கு தொடுக்கப்பட்டு புலன் விசாரணை முடித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணையில் இருந்து வந்த வழக்கின் தொடர் விசாரணையை தற்போதைய காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், சிறப்பு அரசு வழக்குறைஞர் சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் சேவியர்ராணி மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர்களால் நடத்தப்பட்டு வந்தது.


ரூபாய் 100 கோடி மதிப்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு


இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இந்த வழக்கில், விசாரணை முடிவுற்று நேற்று (25.04.2024) திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.கார்த்திகேயன் அவர்களால், குற்றவாளி(1) ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி குற்றவாளி(2)வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், மேற்படி வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் அதிரடி தீர்ப்பளித்து நீதிபதி உத்தரவிட்டார். 


நூறு கோடி ரூபாய் சொத்தா ? ஆச்சரியப்படும் மக்கள்!


ஒரே ஒரு சார்பதிவாளர் அதுவும் 1989 கால கட்டத்திலேயே பல கோடி கணக்கில் வருமானாத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்தது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெளியே தெரியவந்துள்ளது. இதனை அறிந்த திருச்சி உள்ளிட்ட மாவட்ட மக்கள் ’அடேங்கப்பா’ என அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்ந்துள்ளனர். 


சாதாரணமாக ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சம்பாரிப்பதே பலருக்கு பெரிய தொகையாக இருந்துவரும் நிலையில், அவர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிலான நூறு கோடி ரூபாய் சொத்தை ஒரு சாதார சார்பதிவாளர் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்துள்ளார் என்றால், இதுபோன்ற இன்னும் பெரும் பதவிகளில் பணியாற்றிய ஊழல்வாதிகள் இன்னும் எத்தனை எத்தனை கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை குவித்து வைத்திருப்பார்கள் என்று பரவலாக மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.


உடனடியாக நடவடிக்கை தேவை


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அரசு அதிகாரிகளை உடனுக்குடன் கண்டுபிடித்து அவர்களுக்கான தண்டனையை விரைவாக வாங்கி கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற ஊழல்களை தடுக்க முடியும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது