திருச்சி மாநகராட்சியில் இப்போது 65 வார்டுகள் உள்ளது. திருச்சி மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மாநகரை சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்த பகுதிகளை இணைத்து 100 வார்டுகள் கொண்டதாக திருச்சி மாநகராட்சி  விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்த 2021 ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபையில் நகராட்சி நிர்வாகத்துறை, மானிய கோரிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.


இதனைத்தொடர்ந்து மாநகராட்சி விரிவாக்க பணிகளுக்காக அருகிலுள்ள ஊராட்சிகளை இணைக்கவும், வார்டுகளை சீரமைக்கும் பணிகளையும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் பணிகளை தீவிரமாக தொடங்கினர்.


குறிப்பாக திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யும் வகையில் அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து, மருதாண்ட குறிச்சி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், மணிகண்டம் ஒன்றியம், முடிகண்டம், மேக்குடி, கே. கள்ளிக்குடி, தாயனூர், நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, நாகமங்கலம், புங்கனூர், திருவெரும்பூர் ஒன்றியம், பணைய குறிச்சி ,குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி கீழக்குறிச்சி, லால்குடி ஒன்றியம், தாளக்குடி, அப்பாதுரை எசனைக்கோரை, புதுக்குடி, மண்ணச்சநல்லூர் ஒன்றியம், மாதவப்பெருமாள் கோயில், பிச்சாண்டார் கோயில், கூத்தூர், ஆகிய 27 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 100 வார்டுகளாக திருச்சி மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.




திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு 


கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிதாக இணைக்கபட உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தனர். அப்போது பல பகுதி மக்கள் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கபட்டது.


மீண்டும் இந்த ஆண்டு மாநகராட்சி விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். 


இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு ஊராட்சி சார்ந்த பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் கடந்த இரண்டு வாரமாக திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறு ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


திருச்சி மாநகராட்சியுடன் எங்கள் ஊராட்சியை இணைக்க வேண்டாம் என முழக்கங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


மாநகராட்சியுடன் கிராமங்களை இணைத்தால் விவசாயம் பாதிக்கப்படும், பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நம்பி பல கிராமங்கள் உள்ளது. மேலும் சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் உயர்த்தப்படும் இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.


ஆகையால் கிராமங்களை மாநகராட்சி உடன் இணைப்பதை உடனடியாக கைவிட வேண்டும். கிராமம் கிராமமாகவே இருக்கட்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இது குறித்து ஏபிபி நாடு நிறுவனத்திற்கு அளித்த  பேட்டியில் கூறியது..


திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாகவும் , தூய்மையான மாநகராட்சியாகவும் விருதுகள் பெற்றுள்ளது.


மேலும் திருச்சி மாநகராட்சியை 100 வார்டுகள் கொண்ட மாநகராட்சியாக உருவாக்க வேண்டும் என்பது அரசின் முடிவு. அப்படி விரிவாக்கம் செய்யப்பட்டால் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் வளர்ச்சி அடையும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்றார். 


ஆனால் ஒரு சில ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுடைய பதவி பறிபோகிவிடும் என்ற அச்சத்தில் மக்களை தூண்டி விட்டு போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்


திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் என்பது அரசின் முடிவு ,அதில் எந்த மாற்றமும் இல்லை.  அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் விரைவில் வெளியாகும், தேவையற்ற வதந்திகளை நம்பி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். 


திருச்சி மாநகராட்சியை 100 வார்டு கொண்ட மாநகராட்சி ஆக விரிவாக்கம் செய்யப்படுவது உறுதி என தெரிவித்தார்.