திருச்சி மத்திய மண்டலம் காவல்துறை ஐ.ஜி.யாக கார்த்திகேயன் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.


மத்திய மண்டலத்தில் கடும் நடவடிக்கை:


மத்திய மண்டலத்தில் குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கு பல்வேறு இடங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு , தொடர் குற்றங்களின் ஈடுபடுவோர்களை  கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


நடப்பாண்டில் 17 ஆயிரத்து 757 பேர் கைது:


சம்பந்தபட்ட குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துவதுடன் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் காவலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.


அதன்படி மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட மாவட்டங்களில் கடந்த 01.01.24 முதல் 20.06.24 வரை மது சம்பந்தமான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் மீது மத்திய மண்டலத்தில் 17 ஆயிரத்து 528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17757 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 111 லிட்டர்கள் சட்டவிரோத மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.




மத்திய மண்டலத்தில் கள்ளச்சாராயம் போலி மது விற்பனை செய்தவர்கள் கைது


திருச்சி மாவட்டத்தில் 1232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1237 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், 2672 லிட்டர் சட்டவிரோத மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 1763 வழக்குகளும், 1766 குற்றவாளிகளும், 3379 லிட்டர் மது வகைகளும், கரூர் 2910 வழக்குகளும், 2914 குற்றவாளிகளும், 2666 லிட்டர் மது வகைகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 809 வழக்குகளும், 829 குற்றவாளிகளும், 2575 லிட்டர் மது வகைகள்  பறிமுதல் செய்யபட்டு நடவடிக்கை எடுக்கபட்டுல்ளது.


அரியலூர் மாவட்டத்தில் 1395 வழக்குகளும், 1418 குற்றவாளிகளும், 2699 லிட்டர் மது வகைகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2781 வழக்குகளும், 2838 குற்றவாளிகளும், 6501 லிட்டர் மது வகைகளும், திருவாரூர் மாவட்டத்தில் 3289 வழக்குகளும், 3325 குற்றவாளிகளும், 11624 லிட்டர் மது வகைகளும், நாகப்பட்டிணம் மாவட்டத்தில் 1306 வழக்குகளும், 1372 குற்றவாளிகளும், 54907 லிட்டர் மது வகைகளும் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 2043 வழக்குகளும், 2058 குற்றவாளிகளும், 58448 லிட்டர் மது வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - ஐ.ஜி. எச்சரிக்கை


மத்திய மண்டலத்தில் கடந்த (19.06.24 மற்றும் 20.06.24) ஆகிய 2 நாட்களில் மட்டும் மொத்தமாக 342 வழக்குகள் செய்யப்பட்டுள்ளது (திருச்சி 41, புதுக்கோட்டை 49, கரூர் 50, பெரம்பலூர் 38, அரியலூர் 15, தஞ்சாவூர் 60, திருவாரூர் 48, நாகப்பட்டிணம் 20 மற்றும் மயிலாடுதுறை 21) மேலும் தொடர் குற்ற செயல்களில் ஈடுப்பட்ட 13 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட மாவட்டங்களில் இரவு பகல் எல்லா நேரங்களிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கள்ளசாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் கடத்துதல் போன்ற குற்ற செயல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கப்பட்டு வருகிறது.


மேலும் மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் மது சம்பந்தப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டபடியான கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய மண்டல காவல்துறை ஐஜி. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.