தஞ்சாவூர்: இல்லைங்க... மே மாதம் முழுவதும் விடுமுறையே இல்லைங்க என்று மாவட்ட வன அலுவலகம் அறிவிச்சு இருக்கு. என்ன விஷயம் தெரியுங்களா? 

திருச்சி மாவட்டம் என்றாலே முக்கொம்பு, மலைக்கோட்டை, கல்லணை, போன்ற சுற்றுலா தலங்கள்தான் நினைவுக்கு வரும். அந்த லிஸ்ட்டில் திருச்சி ஸ்ரீரங்கம் அருகே மேலூர் நடுக்கரை கிராமத்தில், உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவும் இடம் பிடிச்சு இருக்கு. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கர் பரப்பளவில் இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா அட்டகாசமாக அமைந்துள்ளது.

இது தமிழ்நாடு அரசின் வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. மேலும்  தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு பல்வேறு பூச்சி இனங்கள் உதவிபுரிந்தாலும், வண்ணத்துப்பூச்சிக்குதான் முக்கியமான பங்குண்டு. பெருகிவரும் நகரமயமாதல் காரணமாக, வனப்பகுதிகளின் பரப்பளவு குறைந்து வரும் நிலையில் அழிந்து வரும் வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பாதுகாக்கவும், அதன் இனத்தைப் பெருக்கவும், திருச்சியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு, ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவாக இதனை அறிவித்தார். தற்போது இயற்கை அழகு மிகுந்த சுற்றுலா இடமாக இது மாறியுள்ளது என்றால் மிகையில்லை. இங்கு, இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி மற்றும் சுற்றுலாவுக்காக அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். ஸ்ரீரங்கம் அருகே மேலூர் நடுக்கரை கிராமத்தில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள  இந்த பூங்கா எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வண்ணத்துப்பூச்சிப் பூங்காவுக்கு ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலாப் பிரியர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகளோடு குடும்பங்கள் என அனைத்து தரப்பினரும் வர, இது ஒரு முழுமையான சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது.  

இந்த பூங்காவில் 46-க்கும் மேற்பட்ட வகையான பட்டாம்பூச்சிகள் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.  புல்வெளிகளும், பூச்செடிகளும் அவற்றில் பூத்துக் குலுங்கும் பூக்களும் உங்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. ஆங்காங்கே சில பெயர் பலகைகள் - பூக்கள்/செடிகளின் பெயர்கள், பட்டாம்பூச்சிகளின் வகைகள், அவற்றின் பெயர்கள் எனப் பார்வையாளர்களுக்குத் தகவல் தெரிந்துகொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு மிகவும் பிடித்த சின்யா, டிரைக்டரி, கொரட்டல் ஏரியா, பென்டாஸ், கொன்றை, மேரி கோல்டு பூச்செடிகள், செண்பக மரம், மகிழ மரம், எனச் சுமார் 300க்கும் மேற்பட்ட பல்வேறு வகை வகையான தாவரங்கள் உள்ளன. வண்ணத்துப்பூச்சிகளின்  உருவத்தில் குகை வழிப்பாதைகள், மரங்கள் மற்றும் செடிகளுடன் ,கூடிய நட்சத்திர வனம், புல்தரைகள், பல்வேறு நீர்த் தாவரங்கள் அடங்கிய குட்டைகள், பிரமாண்ட வண்ணத்துப்பூச்சி சிலைகள், என அனைத்தும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள செயற்கை நீரூற்றுகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தப் பூங்காவுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் 2,000-க்கும் மேற்பட்டோரும், வார நாட்களில் 800 பேருக்கும் மேல் வந்து செல்வார்கள், குறிப்பாக அரசுப் பேருந்தை அதிகமாக இயக்கினால், பூங்காவுக்கு வருவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மொத்தத்தில் இந்த வண்ணத்துப் பூச்சி பூங்கா அனைவருக்கும் ஒரு பொழுதுபோக்கு இடமாகவும், பார்ப்பதற்கே மிகவும் அழகான, மன அமைதி தரும் இடமாகவும் மாறி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு அடுத்து பெரிய அளவில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடம் எதுவும் இல்லாததால் ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டது.

திருச்சி வனக்கோட்டம், வன உயிரினம் பூங்கா சரகத்தின்கீழ், இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு குடும்பத்தினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா வாரத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் மூடப்பட்டு இருக்கும். ஆனால், தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் மற்றும் குடும்பத்தினர் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இப்பூங்கா, மே மாதம் முழுவதும் விடுமுறையின்றி செயல்படும் என மாவட்ட வன அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.