திருச்சி மாவட்டம் பொன்னகர் நியூசெல்வநகரை சேர்ந்தவர் லெட்சுமன் (33). இவர் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வனிதா. இவர்கள் கடந்த 8 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டு விசேஷத்துக்காக குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்று இருந்தனர். அங்கு நிகழ்ச்சியை முடித்து கொண்டு நேற்று மாலை  வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கேட்டில் இருந்த பூட்டு உடைந்து கிடந்தது. வீட்டினுள் மரக்கதவு நெம்பி திறக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த லெட்சுமன் வீட்டுக்குள் சென்று அறையில் பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள்  சிதறி கிடந்தன. லாக்கரில் இருந்த 5 லட்சம் மதிப்புள்ள 13 பவுன் தங்க நகைகள், வெள்ளிக்கொலுசு, பிரேஸ்லெட், மடிக்கணினி, ஹார்ட்டிஸ்க், பென்டிரைவ், 17 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளைபோய் இருந்தது. உடனே இது குறித்து செசன்ஸ் கோர்ட்டு காவல்துறைக்கு  தகவல் கொடுத்தனர். காவல்துறை  உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையிலான காவல்துறையினர்  சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். விரல்ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

 



 

பின்பு அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இது குறித்து செசன்ஸ் கோர்ட்டு காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். கொள்ளை நடந்த லெட்சுமன் வீட்டின் முன்புறம் இருந்த இரும்புகேட்டில் சிறிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த ஸ்டிக்கரை கண்டு காவல்துறை அதிர்ச்சி அடைந்தனர். கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ள வீட்டில் ஒருவேளை ஆட்கள் இருந்தால் இரும்பு கேட்டை திறக்கும்போது, இருகதவுகளுடன் இணைத்து ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் கிழிந்துவிடும். இதன் மூலம் அந்த வீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆனால் பல நாட்களாக ஸ்டிக்கர் கிழியாமல் இருந்தால் அந்த வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்து கைவரிசை காட்டி விடுகிறார்கள். சமீபகாலமாக கொள்ளைகும்பல் இதுபோன்ற நூதனமுறையை கையாண்டு வருகிறார்கள்.

 



 

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பூட்டிய வீட்டில் நூதன முறையில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தொடர் கொள்ளை சம்பங்களை தடுக்க  மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகவே பூட்டி இருக்கும் வீடுகளின் முன்பு சந்தேகப்படும்படியாக ஏதாவது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தாலோ, குறியீடு இருந்தாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் குற்றசெயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.