திருச்சி உறையூர் சீனிவாசநகர் 7-வது மெயின்ரோடு 10-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மனைவி புனிதா. இவர்களுக்கு சாந்தினி என்ற மகளும், விஜயராகவன் (வயது 27) என்ற மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு பத்மநாபன் இறந்துவிட்டார். மகள் சாந்தினி விடுதியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விஜயராகவன் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து 7 மாதமாக ஒரு மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த 22 நாட்களாக தில்லைநகரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 1-ந் தேதி அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டில் அவரும், தாய் புனிதாவும் மட்டுமே இருந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயராகவனும், அவரது தாயாரும் அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் விஜயராகவன் திடீரென எழுந்து தனது தாயாரை வெளியே சென்று படுத்து தூங்கும்படி கூறியுள்ளார்.

 



 

இதையடுத்து தாய் புனிதாவும் அறையிலிருந்து வெளியே ஹாலுக்கு சென்று படுத்து தூங்கியுள்ளார். பின்னர் நேற்று காலை 10 மணி அளவில் மீண்டும் அறைக்கு சென்று கதவை திறந்துள்ளார். அங்கு விஜயராகவன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அவரின் தலையில் கத்தியால் மூன்று முறை ஆழமாக குத்தப்பட்ட காயம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் புனிதா உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விஜயராகவனை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து கிடந்ததால் இதுகுறித்து உறையூர் காவல்துறைக்கு  தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர்  அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விரல்ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். பின்னர் விஜயராகவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரோ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 



 

மேலும் விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட விஜயராகவன் இதுவரை 7 முறை தற்கொலைக்கு முயன்று உள்ளதாகவும், இதனால் அவர் நேற்று அதிகாலை வீட்டில் தனது தாயாரை அறையிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு கத்தியால் தனக்குத்தானே பின்னந்தலையில் குத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்தது. இருப்பினும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050