திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி தற்போது திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து ஒரு விமானம் திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்துக்குரிய முறையில் இருந்த 2 பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். இதில் அவர்கள் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த பயணிகளில் ஒருவரான திருப்பூரைச் சேர்ந்த உஷா சிவலிங்கம்(வயது 38) தனது உள்ளாடையில் மறைத்து ரூ.26 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான 505 கிராம் தங்கத்தையும், ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது இக்பால் அப்துல் அஜீஸ் (36) தனது உடலில் மறைத்து ரூ.24 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான 475 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் ரூ.51 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான சுமார் ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து அந்த பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 






இந்நிலையில் நேற்று அதிகாலை துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த 2 பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் அவர்கள் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அதில் ஒருவர் திருச்சியை சேர்ந்த கவிராஜ் ராமசாமி (வயது 39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பயணிகளிடம், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக பயணிகளிடம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




இதனை தொடர்ந்து  கடந்த 2 நாட்களில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு துபாயில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை சோதனை செய்தபோது தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களில் திருச்சி விமான நிலையத்தில் மூன்று கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவது குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. தங்கம் கடத்தப்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.