கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை உடனடியாக கைது செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணத் தொகையும் வழஙகியுள்ளது. 


இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்க வேண்டும் ,அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட  ஆட்சியர், எஸ்பி உள்ளிட்ட அதிகாரங்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் திமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக திரையுலகத்தை சார்ந்த நடிகர்களும் ஆளுங்கட்சி சரியாக செயல்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.




திருச்சியில் மாவட்ட ஆட்சியர் - எஸ்பி அதிரடி நடவடிக்கை கள்ளச்சாராயம் அழிப்பு


இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் ,காவல்துறை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதனை தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் மது விலக்கு அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 


திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
வருண்குமார்  ஆகியோர் நேற்று இரவு (21.06.2024) இரவு பச்சை மலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு இருந்த 250 லிட்டர்  கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர்.




திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் முற்றிலும் அழிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்


அதனைத் தொடர்ந்து அந்த பகுதி மக்களை அழைத்து கள்ளச்சாரயத்தின் தீமைகளை எடுத்து கூறியதை தொடர்ந்து அக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்பாக மது போதைக்கு எதிராக இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது அதனை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் ஏராளமான காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


முன்னதாக மூன்று கிலோமீட்டர் தூரம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், எஸ் பி வருண்குமார் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று சாராய ஊறலை அழித்தனர். 


மேலும் அந்த பகுதி மக்கள் சாராய ஊறலை சுக துக்க நிகழ்வுகளுக்கு யாரும் போட அனுமதிக்க மாட்டோம் விடவும் மாட்டோம் என்று உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் ,எஸ் பி முன் எடுத்துக்கொண்டனர். 


பின்பு பேசிய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பியின் கண்காணிப்பு குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் பச்சை மலை ஓடை அருகே சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனை அழித்துள்ளோம். பச்சை மலையில் துக்க நிகழ்வுகளுக்கு இது போன்ற செயலில் சிலர் ஈடுபடுவது வழக்கமாக வைத்துள்ளனர். இனி திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஊறல் இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.