பெரம்பலூர் மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் ராமராஜ் (வயது 26), மீன் வியாபாரி. இவர் தினமும் திருச்சி புத்தூர், குழுமணி ரோட்டில் உள்ள விளங்கி மீன் மார்க்கெட்டில் மீன் கொள்முதல் செய்வது வழக்கம். கடந்த 28 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் ராமராஜ் வழக்கம்போல மீன் கொள்முதல் செய்வதற்காக பெரம்பலூரில் இருந்து காரில் வந்தர். அவருடன் நண்பர்கள் 4 பேரும் வந்தனர். மீன் மார்க்கெட்டில் ரமாராஜ் மீன் கொள்முதல் செய்தபின் நண்பர்கள் அமர்ந்திருந்த காருக்கு வந்தார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் ராமராஜை வழிமறித்தனர். திடீரென 4 பேரும் ராமராஜை அரிவாள், கத்தியால் வெட்டினர். இதை சற்றும் எதிர்பாராத ராமராஜ் அந்த கும்பலிடம் இருந்து தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அங்குமிங்கும் ஓடினார். ஆனாலும் விடாது துரத்திய அந்த கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தி அரிவாளால் வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த ராமராஜ் அலறி துடித்தபடியே கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். உடனே கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மார்க்கெட்டில் மீன் வாங்க வந்த பொதுமக்கள் இந்த கொடூர சம்பவத்தை கண்டு அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ராமராஜ் உடலை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Continues below advertisement

மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர். ராமராஜ் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பழிக்கு பழியாக அவரை கொன்று இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கொலையாளிகளை பிடிக்க உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நாலாபுறமும் சென்று கொலையாளிகளை தேடி வருகிறார்கள். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராமராஜ் மீது பெரம்பலூர் மாவட்டம் டவுன் போலீஸ் நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே செங்குட்டுவேல் என்பவரை கொலை செய்ததாக வழக்கு உள்ளது.

Continues below advertisement

செங்குட்டுவேலின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக அவரது உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து ராமராஜை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 4 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். ராமராஜை கொலை செய்ய வந்த நபர்கள் அவர் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கியபோது, அவரை கண்காணித்து, மார்க்கெட்டில் இருந்து வெளியே வரும் வரை காத்திருந்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து மீன் மார்க்கெட் கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் பெரம்பலூருக்கு விரைந்தனர். அங்கு போலீசார் முகாமிட்டு விசாரணையை துரிதபடுத்தி உள்ளனர்.