இந்திய திருநாட்டின் 75வது ஆண்டு சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில் நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 75வது சுகந்திரதின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவின்படி, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஆயுத கண்காட்சி கடந்த 13 ஆம் தேதி  தொடங்கியது. இதில் இதுவரை மக்கள் பார்க்காத அதிநவீன தொழில்நுட்பம் பொறுந்திய துப்பாக்கிகள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளது.மேலும் இந்த கண்காட்சி வரும் 19.12.2021 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியினை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காணொலிகாட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாடுமுழுவதும் திருச்சி உள்ளிட்ட 75 இடங்களில் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள ஜுனியர் ஸ்டாப் கிளப்பில் முப்படைகளில் பயன்படுத்தப்படும் பிஸ்டல்கள், லாஞ்சர் மற்றும் கப்பல்களில், நீர்மூழ்கிகளில் பயன்படுத்தப்படும் நவீன பாதுகாப்பு ஆயுதங்கள், கருவிகள் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பழங்கால ஆயுதங்கள் முதல் நவீனகால ஆயுதங்கள் வரையிலும், மற்றும் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான துப்பாக்கிகளும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.




மேலும் ஏராளமான பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வருகைதந்து ஆயுதங்களின் அழகிய கண்காட்சியினை ஆர்வமுடன் பார்வையிட்டு தங்களின் புகைப்படங்களில் பதிவுசெய்தும், ஆயுதங்களின் திறன், செயல்பாடு குறித்தும் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பொது மேலாளர் ராஜீவ்ஜெயின் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பார்வையிட தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், இந்த கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆவலுடன் வந்து பார்த்து செல்கின்றனர். அதோடு இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கி, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஆர்பிஎப், பிஎஸ்எப், காவல்துறை ராணுவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார். இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் எஸ்ஆர்சிஜி எனப்படும் ரிமோட் கண்ட்ரோல் கப்பல் படையில் பயன்படுவதாகும். இது இஸ்ரேல் இந்தியா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 450 முதல் 600 தோட்டாக்கள் வெளியேறும். இலக்கை குறி வைத்தால் தப்பாது. 2 கி.மீ. தூரத்தில் எதிரிகள் வரும்போது லேசர் மூலம் கண்காணித்து தாக்கக்கூடியது.





மேலும் எதிரி நாட்டின் கப்பல்படையின் போர் கப்பல் இன்ஜினை தாக்கி செயல் இழக்க பெரிதும் உதவுகிறது. மேலும் 2022 மேக் இந்தியா திட்டத்தின் கீழ் இதே போன்ற துப்பாக்கி தயாரிக்கப்பட உள்ளதாக அதன் ஊழியர்கள் தெரிவித்தனர்.விழாவில் உதவி பொதுமேலாளர் ஏ.கே.சிங், இணை பொதுமேலாளர் குணசேகர் மற்றும் எஐசிஎல்எப் தொழிற்சங்க தலைவர் ராஜு, செயலாளர் அருள் சேவியர் உட்பட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கண்காட்சியானது புகைப்படங்கள், திரைப்படங்களில் பார்த்த்திருந்த ஆயுதங்களை நேரில் பார்க்கவும், முப்படைகளின் ராணுவ பலத்தை தெரிந்துக்கொள்வதுடன் இளம் தலைமுறையினர் ராணுவத்தில் சேர ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைந்துள்ளது என்று கண்காட்சியினை பார்வையிட்டவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.