சமூக வலைதளத்தில் பெண் காவலர்களை  இழிவுபடுத்தும் வகையில் நேர்காணல் வழங்கிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.


சவுக்கு சங்கர் கைது:


மேலும் திருச்சி மாவட்ட டி.எஸ்.பி.யாஸ்மின், சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து திருச்சி போலீஸார் சவுக்கு சங்கரை கைது செய்தனர். பின்பு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  இந்த வழக்கை விசாரணை செய்த மகிளா நீதிமன்றம் நடுவர் ஜெயபிரதா தீவிரமாக விசாரணை செய்தனர். பின்பு நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சவுக்கு சங்கரை கோவை சிறைச்சாலையில் அடைத்தனர். 




அடுத்தடுத்து புகார்:


ஆனால் கோவை சிறையில்  உயிருக்கு பாதுகாப்பு இல்லை என சவுக்கு சங்கர் கூறினார். இதனை  அடுத்து அவரை சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருச்சயில் அவர் மீது முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே திருச்சிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் நேற்று சிறப்பு உதவி ஆய்வாளர் லதா திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்துள்ளார். 


இதன் அடிப்படையில் நேற்று சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சிக்கு பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.


சவுக்கு சங்கருக்கு ஜாமின்:


இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் கூறியது..  காவல்துறை விசாரணைக்காக அவர் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  அதேபோல் சவுக்கு சங்கர்  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முல்லை சுரேஷ் இந்த வழக்கில் கைது செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்டு அறிந்த நீதிபதி சவுக்கு சங்கரை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.




சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் முல்லை சுரேஷ் கூறுகையில்:-


திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பாக ஏற்கனவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கிற்கு கடந்த 4ம் தேதி அந்த வழக்கிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.


இந்த வழக்கில் கைது செய்ய வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. எங்கள் தரப்பில் ஆட்சபனை தெரிவித்தோம். ஒரு வழக்கில் ஆதாரம் இருந்தால் அதற்காக கைது செய்யலாம் ஒரு குற்றத்திற்காக பல வழக்குகள் போடக்கூடாது என பல்வேறு உதாரணங்களை எடுத்து கூறினோம்.


ஒரு வழக்கில் ஒரு புகார்தாரர், புகார் கொடுத்த பின்பு வேறு புகார் அந்த வழக்கு தொடர்பாக வந்தால் அந்தப் புகார்தாரர் சாட்சியாக தான் சேர்க்க வேண்டும். புதிய வழக்கு பதிவு செய்யக்கூடாது என இருந்த வழக்கை உதாரணமாக எடுத்து வாதிட்டோம். நீதிபதி கேட்டு அறிந்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தள்ளுபடி செய்தார். மேலும் சொந்த ஜாமீன் விடுவிப்பதாக உத்தரவு பிறப்பித்தார். 


விசாரணைக்கு ஆஜரானால் மட்டும் போதும்:


எனவே இந்த வழக்குக்கு அவர் ஜாமீன் கேட்க தேவையில்லை. இனி விசாரணைக்கு ஆஜரானால் மட்டும் போதும். திருச்சி பொறுத்தவரை பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குக்கும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் இருக்கும்போது அவருக்கு கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சென்னை புழல் சிறையில் எந்தவித மருத்துவம் வழங்கப்படவில்லை. கோவை சிறையிலிருந்து எந்த மருத்துவ சான்றிதழும் வரவில்லை என மறுத்துவிட்டனர். இதுகுறித்து நீதிபதியிடம் முறையிட்டார் இதை பரிசிலீப்பதாக நீதிபதி தெரிவித்தார் என கூறினார்.


தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் மீண்டும் சவுக்கு சங்கரை சென்னை புழல் சிறைக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.