நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே சன்னியாசி பனங்குடி கிராமத்தில் தாளரணேசுவரர் கோயிலில் கடந்த 1992 ஆம் ஆண்டு ஆடிப்பூர அம்மன் உலோக சிலை, விநாயகர் சிலை உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனது. இதுகுறித்து திட்டச்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்யபட்டதில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் 1993 ஆண்டு கண்டுபிடிக்க முடியாத வழக்கு என காவல்துறையினர் வழக்கை முடித்தனர். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்த அனைத்து சிலை திருட்டு வழக்குகளும் கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் உட்பட அனைத்து வழக்கையும் சிலை திருட்டு தடுப்பு பிரிவினருக்கு மாற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சிலைகள் மாயமாகி வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆவணங்கள் இல்லாத வழக்குகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.




இதனை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பிராஜாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர் இந்திரா, எஸ்.ஐ கள் தமிழ்ச்செல்வன் பாலச்சந்திரன் அடங்கிய தனிப்படையினர் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும்  திட்டச்சேரி சிலை திருட்டு வழக்கில் ஆவணங்கள் மாயமாகி இருந்தது, தெரியவந்தது. இதில் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் பல்வேறு கோயிலுக்கு சொந்தமான சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என அறிந்து அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் மற்ற சிலைகளுக்கு ஆவணங்கள் உள்ள நிலையில் அங்கு இருந்த ஆடிப்பூர் அம்மன் சிலை, விநாயகர் சிலைகளுக்கு ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. இதனை தொடர்ந்து விசாரனை மேற்க்கொண்டதில்  29 ஆண்டுகள் முன் மாயமானதாக கருதப்பட்ட ஆடிப்பூர அம்மன் சிலை விநாயகர் சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இரு சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் திருச்சியிலுள்ள ஐ.ஜி. அலுவலகத்திற்கு  கொண்டுவந்தனர். இது தொடர்பாக  தகவலறிந்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு திருச்சி வருகை தந்து தொடர்ந்து சிலைகளை பார்வையிட்டார் மேலும் இப்பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு வெகுமதி அளித்து பாராட்டினார்.





மேலும்  டி.ஜி.பி சைலேந்திரபாபு கூறுகையில் மாயமானதாக கூறப்பட்ட சிலைகள் 29 ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிலைகள் ஒரிஜினல் சிலைகள் 1500 முதல் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது சிலைகளின் விலை விலைமதிக்க படாதது என்றார். இதனை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ் பிராஜாராம் கூறுகையில்.. 1992 ஆண்டு திருடுபோய் பின் மீட்கப்பட்டு பாதுகாப்பு கருதி திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. அதற்கான ஆவணங்கள் மாயமான நிலையில் அந்த ஆண்டில் சிலைகளை மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிலைகளை கொண்டு சென்ற 80 வயது முதியவர் மற்றும் அந்த ஆண்டில் பணியிலிருந்த டிஎஸ்பி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோயிலுக்கு எழுதிய கடிதம் மூலம் துப்பு துலக்கப்பட்டது. இந்த சிலைகளை மீட்டு அவ்வூர் பொதுமக்கள் பொதுமக்களிடம் காட்டியபோது தங்கள் கோயில் சிலை எனக் கூறினர். தொடர்ந்து மீட்கப்பட்ட சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்து அங்கிருந்து கோயிலில் ஒப்படைக்கப்படும் என்றார்.இந்த நிகழவின் போது மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், திருச்சி மாநகர ஆணையர் கார்த்திகேயன், திருச்சி சரங்க சரவண சுந்தர், மற்றும் உயர் அதிகாரிகள் இருந்தனர்.