ராமஜெயம் கொலை வழக்கு : முதற்கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை.. துப்பு துலங்குமா?

ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்களிடத்தில், உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது.

Continues below advertisement

ராமஜெயம் கொலை வழக்கு:

Continues below advertisement

தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரும், தொழில் அதிபருமான ராமஜெயம், 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் அதிகாலையில் நடைபயிற்சியின் போது கடத்தப்பட்டு மர்மநபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை 10 ஆண்டுகளாக பல்வேறு பிரிவு போலீசார் விசாரித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அடையாளம் காணப்பட்ட 13 பேர்:

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில், டி.எஸ்.பி. மதன் கண்காணிப்பில் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமஜெயம் கொலை பாணியில் தமிழகத்தில் நடந்த பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் ராமஜெயம் கொலை சம்பவம் நடந்த போது திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் திண்டுக்கல் மோகன் ராம், நரைமுடி கணேசன் உட்பட 13 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி:

இந்த பட்டியலில் உள்ளவர்களிடம் உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்த திருச்சி மாஜிஸ்திரேட் கடந்த மாதம் அனுமதித்தார். இதையடுத்து, உண்மையை கண்டறியும் பரிசோதனை எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில், குறிப்பிட்ட 13 பேரிடமும் கடந்த 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் அரசு நிபுணர்களின் முன்னிலையில் உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்தப்படும் என,  சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

4 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை

ஆனால், திட்டமிட்டபடி நேற்று உண்மை கண்டறியும் சோதனை தொடங்கவில்லை. இந்நிலையில், இன்று முதல்கட்டமாக ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார் மற்றும் சத்யராஜ் ஆகிய 4 பேரிடம், சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் வைத்து உண்மை கண்டறியும் சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து மற்ற 9 பேருக்கும் அடுத்தடுத்த கட்டங்களில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.

காவல்துறை தகவல்

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், "பரிசோதனையின் முடிவில் நிச்சயம் குற்றவாளி குறித்த அறிவியல் ரீதியான முடிவுகள் தெரியவரும். பரிசோதனை அறிக்கை இந்த மாத இறுதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இதன் அடிப்படையில் விசாரணையின் அடுத்தகட்ட நல்ல முன்னேற்றம் இருக்கு” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola