திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.


24 மணி நேர கண்காணிப்பு:


குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் திருட்டு, கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.


இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வழிபறி, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.


புகார் தெரிவிக்க வேண்டும்:


மேலும் திருச்சி மாவட்ட பொதுமக்கள் எதிர்க்கும் அஞ்சாமல் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்தும், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனைகள் செய்பவர்கள் குறித்தும் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.


திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக பொதுமக்கள் புகார் தெரிவிக்க அறிவிக்கபட்ட எண்ணிற்கு புகார் தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.


பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக காவல்துறையினர் பொதுமக்க ளுக்கு இடையூறு செய்தாலும், தவறுகள் செய்தாலும் உடனடியாக தயக்கம் இல்லாமல் புகார் தெரிவிக்கலாம் எனவும் எஸ்.பி வருண்குமார் தெரிவித்துள்ளார்.




திருச்சியில் மணல் மாபியா கும்பலுக்கு போலீஸ் உடந்தையா?


இந்நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி உட்கோட்டம் நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் காவல்துறை எல்லையில் உள்ளது. கொள்ளிடம் ஆறு மற்றும் பங்குனி ஆற்றில் தினந்தோறும் இரவு நேரத்தில் மணல் மாஃபியா கும்பல் மணல் கொள்ளையடிப்பதாக பொதுமக்கள் கொள்ளிடம் போலீசாருக்கு தொடர்ந்து புகார் அளித்தள்ளனர்.


இந்நிலையில், அந்த புகாருக்கு கொள்ளிடம் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மணல் கடத்தலில் ஈடுபடும் மணல் மாஃபியா கும்பலுக்கு ஆதரித்து பணம் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் இருந்ததாக கூறப்படுகிறது.


அதேபோல், மணல் மாபியா கும்பலுக்கு எதிராக யாரேனும் புகார் அளித்தால் அந்த நபர்களை மணல் மாஃபியா கும்பலிடம் காட்டிக் கொடுப்பதாகவும் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமாரின் தனி பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.




திருச்சியில் 25 போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் - எஸ்பி. வருண்குமார் நடவடிக்கை


இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளிடம் காவல் நிலைய எஸ்ஐ மணிகண்டன் தவிர 25 போலீசாரையும் திருச்சி ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்து எஸ்பி வருண்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.


திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணியாற்றிய எழுத்தர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தலைமை காவலர் முதல்நிலை காவலர் இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட 25 காவலர்கள் கூண்டோடு அயுதப்படைக்கு மாற்றப்பட்டிருப்பது திருச்சியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இது போன்ற குற்றம் மற்றும் கடத்தல் கும்பலுக்கு துணை போகும் காவலர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.