திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பச்சமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியது, "பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு மத்திய அரசிடம் இருந்து ஒரு ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் நிதிகள் ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பெரும் தொற்று காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதிகளில்  இருந்து பொதுமக்களுக்கும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மருத்துவ உபகரங்களுக்கும் செலவு செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது.


தொகுதி நிதி:


ஆகையால் எனக்கு இதுவரை வழங்கப்பட்ட 17.10 ரூபாய் 10 கோடி ரூபாயை பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். குறிப்பாக சாலைகள் மேம்படுத்துவது, பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டித் தருவது, மாணவ, மாணவிகளுக்கு தேவையான இருக்கைகள், குடிநீர் தொட்டிகள் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்களுக்கு செய்துள்ளேன். இதுவரை 33 திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி உள்ளேன்.


2 தொகுதிகள்:


மேலும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சியுடன் கூட்டணியில் இருப்போம். மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவேன். எனது கட்சி சார்பாக வருகின்ற தேர்தலில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 2  தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்றார். 




அதிமுக - பாஜக இடையான கூட்டணி பிரிவு என்பது அவர்களுடைய முடிவு. நாங்கள் தேசிய ஜனநாயக கட்சியில் கூட்டனியில்  இருக்கிறோம்.  தமிழ்நாட்டில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக தொடர் கொலை, கொள்ளை ,திருட்டு, கற்பழிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. காவல்துறை அதிகாரிகள் தங்களது பணிகளை முழுமையாக செயல்படுத்த முடியாமல் இருக்கிறார்கள்.


விஜய்க்கு வரவேற்பு:


இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் தற்போது ஆட்சி தெரியும் திமுக அரசு தான் என தெரிவித்தார்.  தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை 2  ஆண்டுகளுக்குப் பிறகு திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. அதையும் முழுமையாக செயல்படுத்தாமல் தகுதி உடையவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்து மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளனர். மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து மக்களுக்கே தருகிறார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை நான் மனமார வரவேற்கிறேன். அவரைப் போன்ற இளைஞர்கள் பலர் அரசியலுக்கு வர வேண்டும். பதவிகளில் அமர வேண்டும், தொடர்ந்து மக்கள் பணத்தை கொள்ளை அடிக்காமல், மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார். 


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இதுவரை நான் பல திட்டங்களை செயல் படுத்தி இருந்தாலும், அதில் குறிப்பாக பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுத்தது, மாணவ,மாணவிகளுக்கு தேவையான இருக்கைகள், பாட புத்தகங்கள், குடிநீர் தொட்டிகள், பள்ளிகளில்  அடிப்படை வசதிகள்  செய்தது,  மன நிறைவாக உள்ளது என்றார்.