கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் முக்கொம்பு மேலணைக்கு வந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்படுகிறது. இந்தநிலையில் முக்கொம்பு மேலணைக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதில் 1 லட்சத்து 33 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடத்திலும், 62 ஆயிரம் கனஅடி நீர் காவிரியிலும் திறக்கப்பட்டுள்ளது. நீரின் அளவு அதிகரித்துள்ளதால் காவிரி-கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் நேற்று மாலை காவிரி-கொள்ளிடத்தில் 1 லட்சத்து 72 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தவித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுக்காப்பான பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் காவிரி, கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களுக்கு செல்ல தடைவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.




இதனை தொடர்ந்து திருச்சி அம்மாமண்டபம் படித்துறை உள்ளிட்ட ஐந்து இடங்களில் இன்று மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் இணைந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியினை நடத்தினர். இதனை தமிழ்நாடு  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் கூறுகையில், வெள்ள காலங்களில் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எவ்வாறு என்பது குறித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இன்று ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெறுகிறது. 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது திருச்சியில் அபாய கட்டம் ஏதுமில்லை. கடந்த முறை வெள்ளத்தில் 88 ஹெக்டேர் விவசாய நிலம் சேதமடைந்துள்ளது. ஆனால் தற்போது ஏதும் சேதம் அடையவில்லை என்றார்.




பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சென்னை மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் 937 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. வயர்கள் அதிகம் செல்வதால், மெட்ரோ வாட்டர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஒப்பந்தக்காரர்களிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால்  பணிகள் விரைந்து நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முழுக்க முழுக்க கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் மக்கள் பாதிக்காத வகையில் மாநகராட்சி அதிகாரிகள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் இணைப்பு சாலைகள், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால், சாலை அமைக்கும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் 576  இடங்களில் சாலைகள் போட வேண்டியுள்ளது. ஆனால் இதுவரை 276 இடங்களில் மட்டுமே சாலைகள் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அதேபோன்று பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தபட்டுள்ளது என தெரிவித்தார்.