நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பா.ஜனதா கட்சியினர் மற்றும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்துவிட்டு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கும், நீர் நிலைகளுக்கும் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, முசிறி, லால்குடி, தொட்டியம், திருவெறும்பூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் 909 இடங்களிலும், பீமநகர் செடல்மாரியம்மன் கோவில் திடல், கோரிமேடு, உறையூர், மன்னார்புரம், கல்லுக்குழி உள்பட 230 இடங்களிலும் என்று மொத்தம் 1,139 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.






இந்த சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டன. ஒரு சில இடங்களில் நேற்றே சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். பா.ஜனதா கட்சி சார்பாக மன்னார்புரம் நடுத்தெருவில் வைக்க மும்பையில் இருந்து ரெயில் மூலம் 6 அடி உயர விநாயகர் சிலை கொண்டுவரப்பட்டது. ஆபரணங்கள், கிரீடம் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்ட அந்த சிலையின் மதிப்பு ரூ.65 ஆயிரம் இருக்கும். விநாயகர் சதுர்த்தியையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மாநகரில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலும், மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பிரச்சினைக்குரிய இடங்களில் விநாயகர் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடவும், கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். 




மேலும் விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைப்பவர்கள், சிலைகளைப் பாதுகாக்கும் பணியில் போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஒலி பெருக்கியில் யாரும் கருத்துக்களை பதிவு செய்யக்கூடாது என்றும், விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கும் விழா குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவல் பணியிலும் ஈடுபட வேண்டும் என்றும் போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.  மேலும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும். குறிப்பாக அனுமதி இல்லாமல் சிலைகளை வைத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக அசம்பாவிதம் ஏற்படும் வகையிலும், மத கலவரத்தை தூண்டும் விதமாக யார் செயல்பட கூடாது. இதுபோன்று தவறான செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பில் இருக்கும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண