திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார் .  அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியது.. 


"நீட் தேர்வு சர்ச்சை குறித்தும் திராவிட இயக்கங்கள் நீட் சமூக நீதிக்கு எதிரானது, மாநில உரிமைகளுக்கு எதிரானது என தொடர்ந்து சொல்லி வருகிறோம். 


நீட் தேர்வில் தரப்படும் கிரேஸ் மார்க் என்பது தவறானது. நீட் தேர்வு தகுதியின் அடிப்படையில் கிடையாது என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியாவிலிருந்து நீட் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. நீட் வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவெடுக்கும் உரிமை மாநில அரசிற்கு தரப்பட வேண்டும். நீட் தேர்வு தமிழ்நாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.


எடப்பாடி பழனிச்சாமியை பொருத்தவரை அவர் அதிமுக தலைவராக இருக்கிறார் என்பதை காண்பிப்பதற்காகவே காவிரி பிரச்சனை குறித்து பேசி வருகிறார். அவர்கள் 10 வருடம் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள்.


காவிரி பிரச்சனையை பொருத்தவரை தமிழக முதல்வரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனை தமிழக அரசு சட்டரீதியாக போராடி வருகிறது. இனி வரும் காலங்களில் அதற்கு ஒரு நல்ல தீர்வு வரும்" என்றார்.




பாஜகவிற்க்கு மெஜாரிட்டி கிடையாது - எம்பி.துரை வைகோ 


பாஜக அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா என்ற கேள்விக்கு?..


தேசிய ஜனநாயக கூட்டணியை பொருத்தவரை அவர்கள் இயற்கையான கூட்டணி கிடையாது. பல இயக்கங்கள் அந்தக் கூட்டத்தில் ஒரு நிர்பந்தத்தின் காரணமாக இருக்கின்றனர். அவர்களுக்கு மெஜாரிட்டி கிடையாது கூட்டணியை வைத்து தான் அவர்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது.


பாஜகவை பொருத்தவரை அவர்கள் மற்ற கட்சியை உடைத்து அவர்கள் ஆட்சியை கைப்பற்றுவது தான் வாடிக்கை. தற்பொழுது தெலுங்கு தேசம், நிதீஷ் குமார் கட்சியை நம்பி அவர்கள் ஆட்சியில் உள்ளனர். 


இந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் அடுத்த கட்டமாக மற்ற கட்சிகளை உடைக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர்களை கைப்பற்றவும் பார்ப்பார்கள். இந்த ஆட்சியை தக்க வைப்பதற்காக அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். அல்லது அமலாக்கத்துறை சோதனை மூலம்  தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க பார்ப்பார்கள். இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்றார். 




பாரதிய ஜனதா கட்சி மறுபடியும் ஆட்சியில் வந்துள்ளதால் அமலாக்கத்துறை சோதனைகள் தொடரும்..


இந்தியா கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்காகவும் சிலரை தங்கள் பக்கம் இழுப்பதற்காகவும் மிரட்டல் பிளாக்மெயில் என அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். கடந்த காலங்களில் அவர்கள் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்து இருக்கிறார்கள். அங்கெல்லாம் அவர்கள் கூட்டணியை உடைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். 


பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால் அமலாக்கத்துறை சோதனையை கடுமையாக்குவார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிக்காத அனைத்து அரசியல் கட்சியினருக்கும் நெருக்கடிகளை கொடுத்து அவர்கள் பக்கம் இழுப்பதற்கு முயற்சி செய்வார்கள்.


திருச்சி எம்பி தொகுதியில் உள்ள புதுக்கோட்டை,  கந்தர்வகோட்டை ஆகியவை வானம் பார்த்த பூமி மாவட்டத்தில் பல இடங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை.  என் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான வைகை காவேரி குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டம். இத்திட்டத்தை இந்த சாமானியன் ஒன்றிய அரசின் நிதியுடன் செயல்படுத்துவேன் என்றார்.


ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்கினால் திட்டங்களை செயல்படுத்த முடியும் முடிந்தவரை என்னால் ஆன அனைத்தையும் செய்வேன் என்றார். 


பாரதிய ஜனதா கட்சி 11 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளனர் அது அவர்களது வளர்ச்சியா சென்ற முறை 9 இடங்களில் போட்டியிட்டு அவர்கள் வாங்கிய வாக்கு சதவீதத்தை  விட தற்போது 23 இடங்களில் போட்டியிட்டு அவர்கள் வாங்கிய வாக்கு சதவீதம் குறைவு என்றார்.


பாஜக கூட்டணியில் பாமக மற்றும் அனைத்து ஜாதி கட்சிகள் மற்றும் செல்வாக்கான பாரிவேந்தர், டி.டி.வி. , ஏ.சி.எஸ் உள்ளிட்ட செல்வாக்கான நபர்களின் வாக்குகளும் சேர்ந்துள்ளது. 




சீமான் போன்று தேர்தலில் பாஜக தனித்து நிற்க முடியுமா? - எம்பி.துரை வைகோ கேள்வி 


சீமானை போல் பாரதிய ஜனதா கட்சியை தனியாக  நிற்கச் சொல்லுங்கள் , அவர்கள் வாக்கு சதவீதம் உயர்ந்துவிட்டதை ஒத்துக்கொள்கிறேன் என்றார்‌.


40 இடங்கள் ஜெயித்தும் பிரயோஜனம் இல்லை என்று சொல்கிறார்கள் இன்னும் இருபது இடங்கள் பிஜேபி குறைந்திருந்தால் அவர்கள் அறிவாலயம் வாசலில் காத்திருப்பார்கள் என்றார் 


திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதே  என்ற கேள்விக்கு.... இந்த நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை பாஜகவின் ஜாதி மத பிரச்சாரம்,  சமூக வலைதளங்களில் அவர்களின் பொய் பிரச்சாரத்தையும் மீறி நாங்கள் அதிகமாக வாக்குகளை பெற்றுள்ளோம்.


தளபதி ஸ்டாலின் பிரச்சாரமே இந்த வெற்றிக்கு காரணம் , ஒன்றிய அரசின் போதிய நிதி ஒதுக்காதது , அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி நாங்கள் பிரச்சாரம் செய்தோம் , இந்த நிதி நெருக்கடியிலும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு செய்துள்ளது. தமிழக அரசு பல லட்சம் கோடிகளுக்கு முதலீட்டை கொண்டுவந்துள்ளது.


ஒட்டுமொத்தமாக 40க்கு 40 என்ற மிகப்பெரிய வெற்றியை முதலமைச்சரின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி ஆக நாங்கள் பார்க்கிறோம் என்றார்.