80 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்த மக்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏவும் தமிழக தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா முயற்சியால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்கிறது.


80 வருட காத்திருப்பு, விடியல் கொடுத்த அமைச்சர்


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவாக்குறிச்சி காலணி தளிக்கோட்டை காலனி கருவாக்குறிச்சி ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த 1942 ஆம் ஆண்டு இப்பகுதி நிலக் குடியேற்ற கூட்டுறவு சங்கம் வாயிலாக 229 குடும்பங்களுக்கு மூன்று ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலம் அப்போதைய ஆங்கிலேய அரசால் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.


அதனைத் தொடர்ந்து கடந்த 1989 ல் 165 ஏக்கர் நிலங்களுக்கும் 114 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் குடிநீர் இணைப்பு மின் இணைப்பு அரசின் இலவச வீடு பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியைச் சேர்ந்த 800  குடும்பத்தினர் பல்வேறு அரசின் சலுகைகளை பெற முடியாமல் தவித்து வந்தனர் .குறிப்பாக கஜா புயலின் போது ஏற்பட்ட இழப்பிற்கு கூட நிவாரணம் பெற முடியாத சூழலில் இப்பகுதி பொது மக்கள் வசித்து வந்துள்ளனர். எப்போது தங்களுக்கு பட்டா கிடைக்கும் ? எப்போது வாழ்வில் விடியல் பிறக்கும் என்று பல ஆண்டுகளாக அவர்கள் காத்துக் கிடந்தனர்.


முயற்சித்த டி.ஆர்.பி. ராஜா - 8ஆம் தேதி கிடைக்கிறது பட்டா


இந்நிலையில், இந்த மக்களுக்கு பட்டா பெற்று தந்து அவர்களுக்கான சலுகைகளை பெற்றுத் தர கடந்த அதிமுக ஆட்சி காலத்திலேயே பல்வேறு முயற்சிகள் எடுத்தார் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஆர்.பி ராஜா. ஆனால், அந்த முயற்சிகள் அப்போது பலனளிக்கவில்லை. இந்நிலையில்,  தொடர்ந்து 3 வது முறையாக மன்னார்குடி தொகுதியில் எம்.எல்.ஏ ஆகி தற்போது தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றி வரும் டி.ஆர்.பி. ராஜா மீண்டும் எடுத்த முயற்சியால் கைமேல் பலன் கிடைக்கவிருக்கிறது. 


ஆட்சியரே பட்டா வழங்க ஒப்புதல் அளிக்கலாம் - அரசாணையால் கிடைத்த வழி


தமிழ்நாடு முழுவதும் உள்ள 51 நில சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அரசு நிலங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியரே பட்டா வழங்கலாம் என்று புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இங்கு உள்ள 580 குடும்பங்களுக்கும் பட்டா ஏற்பாடு செய்து தர திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா. அதன் விளைவாக வரும் 8ம் தேதி தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தலைமையில் இந்த மக்களுக்கு பட்டா வழங்கப்பட உள்ளது.


மறுக்கப்பட்ட சலுகைகள் - கிடைத்தது சுதந்திரம்


இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த பல வருடங்களாக பட்டாவிற்காக தாங்கள் போராடி வந்ததாகவும் பட்டா இல்லாத காரணத்தினால் பல்வேறு அரசு சலுகைகளையும் பெற முடியாமல் தவித்து வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் தற்போது பட்டா கிடைத்திருப்பதன் மூலம் உண்மையான சுதந்திரம் தற்போது தான் தங்களுக்கு கிடைத்திருப்பதாக உணர்வதாகவும் தெரிவித்தனர். மேலும் இதற்கு காரணமாக இருந்த தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அவர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.