தமிழ்நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர்  நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஜி ஸ்கொயர் நிறுவனம் தென் மாநிலங்களில் கட்டுமானங்களில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மட்டுமே சிஎம்டிஏ சார்பாக வீடுகள் கட்ட உடனடியாக அனுமதி வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது  குற்றம்சாட்டியிருந்தார். அவர் கூறுகையில், ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக சிஎம்டிஏ மாறி இருக்கிறது, பொதுவாக நிலம் அப்ரூவல் ஆக 200 நாட்கள் ஆகும். ஆனால், கோவையில் 125 ஏக்கர் நிலத்திற்கு எட்டு நாட்களிலேயே டிடிசிபி மத்திய,  அரசின் ரேரா உட்பட அனைத்து அனுமதியும் கிடைத்திருக்கிறது. முதல்வரின் உறவினர்கள் பலரும் இந்த அமைப்புகளில் வந்துவிட்டார்கள். ஆன்லைன் மூலம் மட்டுமே நிலத்துக்கு அப்ரூவல் வழங்கப்படும் என திமுக அரசு தெரிவித்திருந்தது. எப்போதெல்லாம் ஜி ஸ்கொயர்  ஆவணங்களை சமர்ப்பிக்கிறார்களோ அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மட்டுமே இந்த லிங்க் ஓபன் ஆகும் நிலை இருப்பதாக தெரிவித்தார். இந்தநிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனை சம்பவம் திமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




இதனை தொடர்ந்து திருச்சி ஒத்தக்கடை டேப் ( TAB) காம்ப்ளக்ஸில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வந்தனர்.  அலுவலகம் பூட்டப்பட்டுள்ளதால் அதிகாரிகள் காத்திருந்தனர். அப்போது  அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரிடம் தொலைபேசி மூலம் எப்போது திறக்கப்படும் என விசாரித்தனர்.  அப்போது ஊழியர் ஒருவர் வந்து கதவை திறப்பதை கண்ட உடன் அதிகாரிகள்  உடனடியாக அவரை விசாரித்தனர். பின்னர்அலுவலகத்திற்கு உள்ளே சென்று ஆவணங்களை பார்த்து விசாரணை செய்து வருகின்றனர். திருச்சியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருவனைக்காவில் அடுத்துள்ள கொண்டையம்பேட்டை பகுதியில்  ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடமும்,  திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள பிளாட்டுகள் தற்போது விற்பனை  செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அதிரடி சோதனை திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண