தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது அதனை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்ககூடும். இதன்காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கன மழையும்,  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




தொடர் கனமழை காரணமாக கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது, மேலும் கோரையாறு மற்றும் குடமுருட்டி ஆற்றில் வெள்ள நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையானது அதன் முழு கொள்ளளவான 118 அடியை எட்டும் நிலையில் உள்ளது. எனவே,வெள்ள பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணை தடுப்பணையிலிருந்து 10000 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இன்று மாலை 6.00 மணிக்கு திறந்து விடப்படுகிறது. கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவை தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.




காவிரியில் அதிக நீர்வரத்து வந்துகொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ "செல்பி" (selfie) எடுக்க அனுமதி இல்லை. வெள்ள அபாயம் ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். 93840 56213 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். மேலும் வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள தெரிவிக்கலாம். மேலும் TN- SMART என்ற செயலியின் மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.