திருச்சி மாவட்டம் தாராநல்லூர் விஸ்வாஸ்நகர் 2வது குறுக்கு பிரதான சாலையை சேர்ந்தவர் இப்ராஹிம் இவருடைய மனைவி நவீன் (46). இவருடைய மகன் ஆசிம்கான் (28). இவர் விருத்தாசலத்தில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். மேலும் ஆசிம்கான் சென்னையில் கல்லூரியில் படித்தபோது, ரேஷ்மா (26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் மகன் உள்ளான். ஆசிம்கானைவிட ரேஷ்மா குடும்பத்தினர் சற்று வசதி குறைவானவர்கள். ஆசிம்கான் தனது மனைவி ரேஷ்மாவை விஸ்வாஸ்நகரில் தங்க வைத்துவிட்டு அடிக்கடி விருத்தாசலம் சென்று அரிசி ஆலையை கவனித்து வருவது வழக்கம். இந்தநிலையில் ரேஷ்மாவை ஆசிம்கான் திருமணம் செய்து கொண்டது மாமியார் நவீனுக்கு பிடிக்கவில்லையாம். இதன் காரணமாக அவர், மருமகள் ரேஷ்மாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ரேஷ்மா மனக்குமுறலில் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆசிம்கான் நேற்று முன் தினம் ஒரு நிகழ்ச்சிகாக வெளியூர் சென்றார். இதனை தொடர்ந்து நவீன் சமையல் அறையில் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் அடிபட்டது. உடனே தன்னை தூக்கிவிடும்படி ரேஷ்மாவிடம் நவீன் கூறி உள்ளதாகவும், . ஆனால் மாமியார் நவீன் மீது ஆத்திரத்தில் இருந்த ரேஷ்மா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை எழுந்திருக்க விடாமல் அருகே இருந்த  கத்தியால் சரமாரியாக குத்தியதாக தகவல் கூறினர்.




மேலும்  இதில் படுகாயம் அடைந்து நவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே ரேஷ்மா மாமியார் நவீனின் உடையில் தீ வைத்து அவரது உடலை எரித்தார். சிறிதுநேரத்தில் நிகழ்ச்சிக்கு சென்று இருந்த ஆசிம்கான் வீடு திரும்பினார். அப்போது கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டு நவீன் உடல் கருகி இறந்ததாக கூறி ரேஷ்மா கண்ணீர்விட்டு அழுது நாடகமாடியுள்ளார். இது குறித்து காந்தி மார்க்கெட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர்  நவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விபத்தில் இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் நவீனின் உடலில் 14 இடங்களில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காந்திமார்க்கெட் காவல்துறையினர் ரேஷ்மாவை பிடித்து துருவி, துருவி விசாரித்தனர். விசாரணையில், அவர் தான் மாமியார் நவீனை கொலை செய்தார் என்பதும், இது வெளியே தெரியாமல் இருக்க கியாஸ் கசிந்து அவர் தீ விபத்தில் இறந்ததாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த காவல்துறையினர் ரேஷ்மாவை கைது செய்தனர்.




மேலும் தொடர்ந்து விசாரனை மேற்கொண்டதில் சித்ரவதை செய்ததால் கொன்றேன் என ரேஷ்மா வாக்குமூலம் தந்துள்ளார். மாமியாரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ரேஷ்மா காவல்துறையினரிடம்  அளித்த வாக்குமூலத்தில், நான் எனது கணவர் ஆசிம்கானுடன் சேர்ந்து வாழ்ந்தது மாமியார் நவீனுக்கு பிடிக்கவில்லை. இதனால் தினமும் என்னை சித்ரவதை செய்து வந்தார். ஏற்கனவே 2 முறை கருக்கலைப்பு செய்தநிலையில், 3-வது முறையாக ஒரு பிள்ளையை பெற்று எடுக்க மிகவும் சிரமப்பட்டேன். சம்பவம் நடந்த அன்று சமையல் அறையில் இருந்த எனது மாமியார் நவீன் திடீரென தவறி கீழே விழுந்தார். அப்போது அவர் என்னிடம் தூக்கிவிடும்படி கேட்டார். ஆனால் அவர் மீது இருந்த ஆத்திரத்தில் நான் அவரிடம் அப்படியே இறந்துவிடுங்கள் என்று கூறினேன். இதை கேட்டு அவர் சத்தம் போட்டார். உடனே நான் அருகே இருந்த சிறிய கத்தியை எடுத்து அவரை பலமுறை குத்தி கொலை செய்துவிட்டு, அவரது உடலை எரித்தேன். பின்னர் கியாஸ் கசிந்து தீ விபத்தில் அவர் இறந்ததாக நாடகமாடினேன் என்று கூறியுள்ளார்.