திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புத்தூரை சேர்ந்தவர் மாணவி வித்யாலட்சுமி 19 வயது, இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் இவர் பாய்லர் ஆலை பகுதியில் மணியம்மை நகரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிக்கு தினமும் சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அந்த மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் சாப்பிட்ட உணவில் விஷம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில், பாய்லர் ஆலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பாய்லர் ஆலை காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று, அந்த மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர். இதில் அந்த மாணவி காவல்துறை அதிகாரிகளிடம்  கூறுகையில், கடந்த ஒரு மாதமாக தன்னை ஒருவன் பின்தொடர்ந்து வந்ததாகவும், கடந்த 11-ந் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, அந்த நபர் தன்னிடம் காதலிப்பதாக கூறியதாகவும், இதனால் அவரை தான் செருப்பால் அடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 12-ந் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, தன்னை காதலிப்பதாக கூறிய நபர் உள்பட 3 வாலிபர்கள் சேர்ந்து தன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அருகில் உள்ள ஒரு சந்தில் வைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து குடிக்க செய்ததாகவும் கூறியுள்ளார்.




இதனால்  பாதிக்கப்பட்ட அவர் கடந்த 13-ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், பின்னர் வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு அதிகமானதால் கடந்த 17-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாகவும், அந்த மாணவி வாக்குமூலத்தில் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பாய்லர் ஆலை காவல்துறையினர் வழக்குப்பதிந்து 3 பேரை தேடி வந்த நிலையில், ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த மாணவி தனியார் மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




இந்நிலையில் மாணவியின் இறப்புக்கு காரணமான மூன்று நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பெல் காவல்துறையை கண்டித்து திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மலைக்கோவில் பகுதியில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள்  சம்பவ இடத்திற்கு வந்து  போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எங்களது மகளின் இறப்பிற்கு காரணமான 3 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், இல்லை என்றால் அதுவரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் என கூறி தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர்  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆகையால் போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.