கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உணவு பாதுக்காப்புத் துறை சார்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சில மாவட்டங்களில் தொடர்ந்து கெட்டுபோன கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும் சில கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒரு ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 46 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

 



 

மேலும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் அதிகாரிகள் இன்று அசைவ ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் இறைச்சிகளை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிக்கன்களுக்கு மசாலாப்பொடி தடவி சமைத்த பின்பு பிரிட்ஜில் வைத்திருந்ததும் தெரிந்தது. இவை கெட்டுப்போன இறைச்சிகள் என்பதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சோதனை குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘அசைவ ஓட்டல்களில் உணவுகள் பாதுகாப்பான முறையில் தயாரித்து விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எச்சரிக்கையையும் மீறி அவர்கள் தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டதால் இந்த சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 25 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. ஷவர்மா கடைகள் பல புதுக்கோட்டையில் மூடப்பட்டு விட்டது. ஒரு சில கடைகள் மட்டும் இன்னும் இயங்கி வருகிறது. அந்த கடைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படும்

 



 

மேலும் தற்போது நடைபெற்ற சோதனையில் விதிகளை மீறியதாக கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை ஓட்டல்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும். அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்டவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதில் அந்த உணவகத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தி தீர்ப்பளிப்பார் என்றனர். மேலும் உணவு பாதுக்காபு துறை விதிமுறைகளை மீறி உணவகங்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என உணவு பாதுக்காப்பு  துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.