10 ஆண்டுகள் நிறைவடைந்த ஆதார் அட்டையை பொதுமக்கள் புதுப்பிக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட் அறிவிப்பில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக மட்டுமல்லாது நாட்டு மக்கள் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகள், பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்ட முக்கியமான நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான ஆவணமாக திகழ்கிறது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களுக்கான மத்திய அமைச்சகம், ஆதார் எண் வழங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் ஆதார் அட்டைதாரர்கள் தங்களது அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி ஆதார் அட்டைதாரர்கள் தாங்கள் ஆதார் எண் பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தால், தற்போதைய புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தையும், தற்போதைய முகவரியுடன் கூடிய அடையாள ஆவணத்தையும் சமர்ப்பித்து புதுப்பித்து கொள்ள வேண்டும். ஆதார் தரவுகளை புதுப்பிப்பதன் வாயிலாக, மத்திய சேமிப்பகத்தில் ஆதார் தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக துல்லியமாக பதிவில் இருப்பதை உறுதி செய்ய முடியும்.




மேலும் பொது மக்கள் தங்கள் அடையாளம் மற்றும் முகவரிகள் உள்ளிட்ட ஆதார் விவரங்களை புதுப்பித்து வைத்து கொள்ளுவதால் அரசு வழங்கும் நலத்திட்டங்களையும் மற்றும் சேவைகளையும் எவ்வித சிரமமும் இன்றி உடனடியாக பெற்று பயன் பெறலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்த பொதுமக்கள் தங்கள் அடையாளம் புகைப்படம் மற்றும் முகவரி உள்ளிட்ட ஆதார் விவரங்களை புதுப்பித்து கொள்ள ஏதுவாக ''மை ஆதார்" என்ற இணையதளத்திலும், செயலியிலும் "அப்டேட் டாக்குமெண்ட்" என்ற பிரிவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சேர்த்துள்ளது. பொது மக்கள் நேரடியாக இத்தளத்திற்குள் சென்று தங்களுடைய விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம். இது தவிர பொதுமக்கள் அருகே உள்ள ஆதார் மையங்களுக்கு நேரில் சென்று ஆவணங்களை சமர்ப்பித்து, தங்களது ஆதாரினை புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால் ஆதார் விவரங்களை புதுப்பிக்க கோரி தொலைபேசி வாயிலாக வரும் எந்தவித அழைப்புகளுக்கும், குறுஞ்செய்திகளுக்கும் பொதுமக்கள் எவரும் பதிலளிதது தங்கள் ஆதார் விவரங்களை தர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர