தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளி ஆசிரியர்- மாணவன் இடையே திருமணம் நடப்பது, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளி கல்விதுறை சார்பாக  அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் மீது தவறான எண்ணங்களை புகுத்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டு இருந்தது. இதனை தொடர்ந்து  திருச்சி மாவட்டம்  துறையூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்தவர் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த ஆசிரியை சர்மிளா (வயது 26). இவரும், அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் துறையூரை சேர்ந்த மாணவனும் கடந்த 5-ந் தேதி ஒரே நாளில் மாயமாகினர்.

 

பள்ளிக்கு சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை கண்டுபிடித்து தருமாறு கடந்த 6-ந் தேதி மாணவனின் பெற்றோர் துறையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மாணவனை ஆசிரியை சர்மிளா அழைத்து சென்றது தெரிய வந்தது. 

 



 

மேலும்  மாணவனுடன் ஆசிரியை எங்கு இருக்கிறார் என்று அவரது செல்போன் எண்ணை வைத்து காவல்துறையினர்  கண்காணித்த வண்ணம் இருந்தனர். அப்போது இருவரும் திருவாரூர், தஞ்சாவூர் பகுதிகளில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. கடைசியாக இருவரும் திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து துறையூர் குற்றப்பிரிவு காவல்துறை உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையிலான காவல்துறையினர் எடமலைப்பட்டிபுதூருக்கு விரைந்து சென்று அங்கு தோழியின் வீட்டில் தங்கியிருந்த சர்மிளா மற்றும் மாணவனை மீட்டு துறையூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், திருவாரூரில் சுற்றித் திரிந்த இருவரும் தஞ்சை பெரிய கோயிலில் திருமணம் செய்து கொண்டதும், பின்னர் எடமலைப்பட்டி புதூரில் உள்ள சர்மிளாவின் தோழியின் வீட்டில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது.

 



 

அதனைத்தொடர்ந்து திருமண வயதை அடையாத பள்ளி மாணவனை அழைத்து சென்று திருமணம் செய்த சர்மிளா மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவனை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  மாணவனுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டிய ஒரு ஆசிரியை, அவரை அழைத்துச் சென்று திருமணம் செய்த சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவ, மாணவிகளின் வருங்கால வாழ்கையின் நலனை கருதி மாநில அரசு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.