மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டம்: காரணம் என்ன?

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Continues below advertisement
பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் ஊழியர்கள் பேரம் பேசி பணம் வாங்கும் வீடியோ காட்சி மற்றும் செல்போன் பேசியபடி சிறுவனுக்கு மொட்டை அடிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி முடி காணிக்கை செலுத்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்தும் வருகின்றனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு கட்டணமில்லா முடி காணிக்கை செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
 
அதன் பேரில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் கட்டணம் ஏதும் பெறாமல் அந்தந்த கோயில் நிர்வாக செலவிலேயே பக்தர்களுக்கு கட்டணமில்லா முடி காணிக்கை செலுத்தும்  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் மொட்டை அடித்த பின்னர் ஊழியர்கள் தலைக்கு 50 ரூபாய் என பேரம் பேசி கட்டணம் பெறும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 

 
இதைத்தொடர்ந்து கோயில் இணை ஆணையர் கல்யாணி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். அதில், மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் பக்தர்களிடம் பணம் கேட்பது தெரிய வந்தது. மேலும், கோயிலுக்கு வந்த பக்தர்களும் இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர்.
 
அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் 7 தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதாது, சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களை கடைவீதி உள்ளிட்ட இடங்களில் உள்ளவர்கள் இடைமறித்து மொட்டை அடிப்பதால் தங்களுடைய வருமானம் பாதிக்கிறது. எனவே அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று காலை 5.30 மணி முதல் 100-க்கும் மேற்பட்ட மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
 

 
இதன் காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு முடிகாணிக்கை செய்ய வந்த ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செய்ய முடியாமல் பரிதவித்தனர். இதை அறிந்த கோயில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் சமயபுரம் போலீசார் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, இதுகுறித்து உங்களுடைய குறைகளை மனுவாக எழுதிக் கொடுத்தால் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த சம்பவத்தால் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

Continues below advertisement

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola