புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிலரிடம் விசாரணை நெருங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளிகளாக்க நினைக்கிறது போலிஸ் அதனால் விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இறுதிக் கட்டத்தை எட்டியதாக விசாரணைக் குழு கூறியது. மேலும்  தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய அறிவியல் ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், வழக்கு தொடர்பாக 140-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில், அவர்களில் 119 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதில் முதல்கட்டமாக 11 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைக்கு கோர்ட்டு மூலம் அனுமதி கிடைத்தது. இதில் ஆயுதப்படை போலீஸ்காரர் முரளி ராஜா உள்பட 3 பேரிடம் நேற்று முன்தினம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நடைபெற்றது. 

 



 

இந்த நிலையில் 3 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு புதுக்கோட்டை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு அங்கிருந்து சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 11 பேரில் 8 பேர் வராத நிலையில், அவர்களது ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்படவில்லை. இதனால் இந்த வழக்கின் விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மேலும் 10 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை நடத்த புதுக்கோட்டை மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி கேட்டனர். இதில் மேலும் 10 பேரின் பெயர் பட்டியலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்து சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொள்ள உள்ளனர். மேலும் 10 பேருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண