தமிழ்நாட்டில் காலாவதியான பொருள்களை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்கிறது, உணவுப் பாதுகாப்புச் சட்டம். ஆனால், சில கடைகளில் காலாவதி தேதியை மாற்றிவிட்டுப் பொருள்களை விற்பனை செய்கிறார்கள். அதை வாங்கிப் பயன்படுத்தும் மக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். மேலும் உணவகங்களில் சமைக்க பயன்படுத்தபடும் பொருட்கள், சுத்தமாகவும், ஆரோகியமாகவும் இருக்க வேண்டும். அதேசமயம் இறைச்சி வகைகள் சமைக்க பயன்படுத்தும் போது நல்லதாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.


இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் உணவகங்களில் தயாரிக்கபடும் உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் உயிரிழப்புகள் நடந்து வருகிறது. ஆகையால் தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் விதிமுறைகளை பின்பற்றி சரியான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றனவா, உணவுகளை பாதுகாக்க முறையான பிரீசர் வசதி உள்ளதா என்று ஆய்வு செய்யவேண்டும். மேலும் இவ்வாறு உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத மற்றும் தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இந்நிலையில் அரியலூர் நகரில் உள்ள 15 ஓட்டல்களில் நேற்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, காடை இறைச்சி என சுமார் 55 கிலோ அளவிலான காலாவதியான இறைச்சிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இறைச்சி பாக்கெட்டுகளை திறந்தால் அதனை உடனே பயன்படுத்த வேண்டும் எனவும், இறைச்சிகளை அதற்குரிய வெப்பநிலையில் சரிவர பராமரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் சைவ மற்றும் அசைவ பொருட்களை தனித்தனி குளிர்சாதன பெட்டிகளில் வைத்து அவற்றை பயன்படுத்த வேண்டும் எனவும், சமையல் அறைகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் கடை ஊழியர்களுக்கும் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து காலாவதியான இறைச்சிகளை வைத்திருந்ததாக அரியலூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு `சீல்' வைக்கப்பட்டது. மேலும் பிற குறைபாடுகள் கண்டறியப்பட்ட ஓட்டல் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்து சென்றனர். மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக 2 கடைகளுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் அனைத்து உணவங்களிலும் உணவின் தரத்தை பற்றி உடனடியாக பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் உணவு பாதுக்காப்பு துறை சார்பாக தொலைபேசி எண், மற்றும் புகார் எண் என தனி தனியாக ஒட்டவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இனி வரும் காலங்களில் தரமில்லாத பொருட்களை பயன்படுத்தும் உணவங்கள் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை எடுக்கபடும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.