திருச்சி மாவட்டத்தில், 2 மாதத்தில் 2,308 குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் கைது..
திருச்சி தீபன் | 03 Mar 2022 01:49 PM (IST)
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 2,308 பேர்கள் கைது செய்து சிறையில் அடைக்கபட்டனர். மேலும் 26 பேர் மீது குண்டாஸ் - திருச்சி மாநகர காவல்துரை ஆணையர் கார்த்திக்கேயன்
திருச்சி_மாநகர_காவல்துறை_ஆணையர்_கார்த்தியேகன்
திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்று கொண்டது முதல் திருச்சி மாநகரத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்ட நடத்தைக்காரர்கள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதன்படி, திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 2,308 நபர்கள் மீது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தது, திருச்சி மாநகரத்தில் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி வழிப்பறி குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகள், குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள், போதை பொருட்களை விற்பனை செய்தவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 26 நபர்கள் மீது குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்த 15 நபர்கள் மீது கஞ்சா வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை பேணுவதற்கான பிணையமும், நன்னடத்தைக்கான பிணையமும் பெற்றிருந்தும், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு பிணையத்தை மீறிய 5 ரவுடிகள் உட்பட 8 நபர்கள் மீது திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவரால் சிறை தண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 1,684 நபர்கள் மீது உரிய சட்ட பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டைவிட, நடப்பாண்டில் கொலை மற்றும் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது என்றார்.
திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிள், கெட்ட நடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்பவர்கள், பெண்கள், பொதுமக்களுக்கு இடையூர் செய்வது, வழிபறி, ரவுடி, கொலை, கொள்ளை போன்ற தொடர் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைத்தில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், கண்காணிப்புடனும், தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். குற்ற செயலில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் உத்தரவிட்டுள்ளார்.