திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஓழுங்கை பாதுகாக்கவும், பணம் செல்போன் பறிப்பு, பாலியல் வன்முறை, கஞ்சா விற்பனை மற்றும் கொலை போன்ற குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் ரோந்து செய்தும், வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து மாநகர் முழுவதும் காவல்துறையினர் 24 மணி நேரமும் தொடர்ந்து பாதுக்காபு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பல்வேறு இடங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் மீது நடவடிகைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் மாநகரில் முக்கிய இடங்களான பாலக்கரை,  தில்லை நகர், சத்திரம் பேருந்து நிலையம், கரூர் நெடுங்சாலை, காந்தி மார்க்கெட், பால் பண்ணை, மன்ணார்புரம், ராம்ஜிநகர்,விமானநிலையம், உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டால் சட்ட ஒழுங்கை காக்கும் வகையில் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் போடபடும் என்று திருச்சி மாநகர காவல்துறை ஆனையர் கார்த்திக்கேயன் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.




அதன்படி காந்தி மார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கில் அரவிந்த் மற்றும் சூர்யா ஆகியோர் மீது கடந்த 5ஆம் தேதியும், பொன்மலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி அலெக்ஸ் என்கிற அலெக்ஸ்சாண்டர் மற்றும் சரத் ரத்தினசாமி ஆகியோர் மீது கடந்த 13ஆம் தேதியும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். கோட்டை காவல்நிலைய எல்லையில் கத்தியை காட்டி பணம் பறித்து சென்ற விக்கி என்கின்ற விக்னேரன் என்பவர் மீது கடந்த 9ஆம் தேதியும், கண்டோன்மெண்ட் காவல்நிலைய எல்லையில் செயின்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஜாப்ரின் சுரேன் மற்றும் சரத்குமார் ஆகியோர் மீது கடந்த 12ஆம் தேதியும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 15 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த கொத்தமங்கலத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் மீது கடந்த 3ஆம் தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ராஜ்குமார் வீரப்பன் என்பவர் மீது 9ஆம் தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். எடமலைபட்டி புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நியாயவிலைக்கடையில் உள்ள அரிசியை கடத்திய சுரேஷ் என்பவர் மீது கடந்த 6ஆம் தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.




மேலும், திருச்சி மாநகரில் நவம்பர் மாதத்தில் கடந்த 15 நாட்களுக்குள் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் செய்த 10 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மாநகர முழுவதும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.