திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்மாத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார்  கல்லூரி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் இன்று  நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.




இம்முகாம்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது :


 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீர் திட்டமான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நடைபெற்று வருகிறது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய பகுதிக்கு ஒரு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் என்கிற அடிப்படையில் நாள்தோறும் 1 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்றையதினம் தென்மாத்தூர், உடையானந்தல், அழகானந்தல், கண்ணப்பந்தல், கொளக்குடி, நடுப்பட்டு, சு.ஆண்டாப்பட்டு, அரடாப்பட்டு, பவித்திரம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களுக்கு அருகாமையில் உள்ள இக்கல்லூரி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் என்ற இச்சிறப்பு முகாம் நடைபெற்றுது. 15 துறைகளைச் சார்ந்த 44 சேவைகள் மற்றும் பட்டியலிடப்படாத சேவைகளின் மனுக்களும் இம்முகாமில் பதிவு செய்யப்படுகிறது. இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும்.




குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் மற்றும் இருப்பிடச்சான்றிதழ்களை வழங்கிடும் பொருட்டு பெற்றோர்களின் ஒப்புதல் பெறப்பட்டு அந்தந்த பள்ளிகளுடைய ஆசிரியர்கள் மூலமாக இம்முகாம்களில் விண்ணப்பிக்கப்படுகிறது. அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றையதினம் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் 801 மாணவர்கள்  கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் 659 மாணவர்கள் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் 2181 மாணவர்கள் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் 2038 மாணவர்கள் செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் 469 மாணவர்கள் என மொத்தம் 6148 மாணவர்கள் சாதிசான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.




மேற்படி பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து சான்றிதழ் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்களும் அரசின் சார்பாக செயல்படுத்தப்படும் இச்சிறப்பு திட்ட முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார். மேலும் இன்று நடைபெற்ற முகாமில் மனுக்களை அளித்த 3 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையினையும் 1 பயனாளிக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சான்றிதழையும் 2 பயனாளிக்கு மருத்துவ காப்பீடு சான்றிதழ்களும் உடனடி தீர்வாக காணப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்  தெ.பாஸ்கர பாண்டியன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 5 இடங்களில் இச்சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.  அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.