தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் நடப்பு ராபி பருவத்தில் விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து,பாசி, மல்லி, சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை அதிகளவு சாகுபடி செய்துள்ளனர். எதிர்ப்பார்த்த மழை இல்லை என்பதால் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தினை சந்தித்து வருகின்றனர். உரத்தட்டுபாடு, உரவிலை உயர்வு, வேலைக்க ஆள்கள் கிடைக்கவில்லை, பூச்சி தாக்குதல் என பல்வேறு நெருக்கடிகளை தினந்தோறும் எதிர்க்கொண்டு வருகின்றனர்.




அனைத்து பிரச்சினைகளையும் எதிர்க்கொண்டு பயிர்களை வளர்த்து வரும் நிலையில் காட்டுபன்றிகள் தொல்லை விவசாயிகளுக்கு மற்றொரு தலைவலியாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் நிலங்களுக்கு புகுந்து வளர்ந்து நிற்கும் பயிர்களை சேதப்படுத்தி செல்லும் நிலை உள்ளது. அதிலும் கடந்த 4 ஆண்டுகளாக காட்டுபன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை விவசாயிகள் புகார் தெரிவித்தும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.




இந்நிலையில் முத்தலாபுரம், வெம்பூர், படந்தபுளி, அயன்கரிசல்குளம், தலைக்காட்டுபுரம், மேலக்கரந்தை என பல்வேறு கிராமங்களில் நேற்றிரவு காட்டுப்பன்றிகள் நிலங்களில் புகுந்து மக்காச்சோளப்பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. சுமார் 1500 முதல் 2000 ஏக்கர் வரை காட்டுப்பன்றிகளால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பயிர்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 10 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இன்னல்களுக்கு இடையில் விவசாயம் செய்து வரும் நிலையில் காட்டுப்பன்றிகள் தொல்லையினால் கடும் அவதி அடைந்து வருவதாகவும், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தால் காட்டுப்பன்றி இல்லை, வீட்டு பன்றி என்று கூறி நழுவி செல்வதாகவும் விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.




இந்நிலையில் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி பகுதியில் கடந்த சில தினங்களாக வீசிய சூறைக்காற்றினால் சுமார் 300 ஏக்கரில் பயிரிட்டு இருந்த மக்காச்சோள பயிர்கள்சேதமடைந்த பயிர்களை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், சூறாவளிகாற்றினால் மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். 100 ஹெக்டர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பாதிப்பு குறித்து அரசு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். அதற்கு ஏற்ப அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும். மேலும் பருத்தியில் தண்டுப்புழு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதையும் அரசு கணக்கீட்டு நிவாரணம் வழங்க வேண்டும்.




மழைநீரை சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக தான் அதிமுக ஆட்சிகாலத்தில் குடிமரமாத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த திட்டம் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டத்தினை மீண்டும் அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். குடிமரமாத்து திட்டம் மூலமாக நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதால் அரசியல் காழ்ப்புணர்சி பார்க்கமால் குடிமரமாத்து திட்டம் போன்ற நல்ல திட்டங்களை திமுக அரசு தொடரவேண்டும், மக்காச்சோளத்திலும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்வது மட்டுமின்றி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைக்க முதல்வர் அலுவலகம் வரை எடுத்து சென்று கிடைக்க வழிவகை செய்வேன் என்றார்.