நெல்லை மாவட்ட கிழக்கு காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மரணம் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கே.வி.தங்கபாலு, ரூபி மனோகரன் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.


ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்:


மரண வாக்குமூலம் மற்றும் மருமகனுக்கு எழுதிய கடிதம் என உயிரிழந்த ஜெயக்குமார் எழுதியதாக வெளியான இரண்டு கடிதத்தில் உள்ள எழுத்து மற்றும் கையெழுத்து ஜெயக்குமாரின் கையெழுத்து தானா? என்பதில் தற்போது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி வள்ளியூரில் அமைந்துள்ள SBI வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக ஜெயக்குமார் தன்னுடைய கைப்பட எழுதியுள்ள  கடிதத்திற்கும், அவர் மரண வாக்குமூலம் எழுதியுள்ள கடிதத்திற்கும் உள்ள எழுத்துக்கள் வித்தியாசமாக உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.


இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக, அவர் எழுதியான வெளியான கடிதத்திலும், இந்த கடிதத்திலும் கையெழுத்து முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது.  எனவே இந்த கொலையில் உறவினர்களுக்கு தொடர்பு உள்ளதா? அல்லது வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்றும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. அதோடு அவரின் கையெழுத்தை உறுதி செய்யும் முயற்சியிலும் காவல்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. நேற்று தடய அறிவியல் துறையினர் அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து ஜெயக்குமாரின் கையெழுத்து தான் என உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியான நிலையில் இன்று அதில் புதிய திருப்பத்தை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஜெயக்குமாரின் இறுதி நிமிடங்கள்:


நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தற்போது பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ளது. ஜெயக்குமார் எழுதியதாக வெளியான இரண்டு கடிதங்கள் அடிப்படையில் முதலில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த சம்பவங்கள் கொலையாக இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக  வெளியாகி வருகிறது.


அதன்படி கடந்த 2 ஆம் தேதி இரவு வீட்டை விட்டு சென்றவர் அதன்பின் காணாமல் போனதாக மகன் கருத்தையா உவரி காவல் நிலையத்தில் 3 ஆம் தேதி புகார் ஒன்றை அளிக்கிறார். அதற்கு பிறகு 4 ஆம் தேதி அவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். இதற்கிடையில் அவர் 2 ஆம் தேதி திசையன்விளை அருகே பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் உள்ளே சென்று வரும் வீடியோ காட்சிகள் வெளியானது. அதுவே அவரின் இறுதி நிமிடங்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதன் பின் அவர் எங்கு சென்றார்? என்ன நடந்தது? என்பது தெரியவில்லை. 


ஜெயக்குமார் கொலையா? வலுக்கும் சந்தேகம்?


அதோடு அவர் உயிரிழந்து கிடந்த இடத்தில் அவரது செல்போன்களும் இல்லை, அவரின் அடையாள அட்டையான ஆதார்கார்டு போன்றவை மட்டும் கிடந்துள்ளது. அவரது செல்போன் எங்கே? என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில்  நேற்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை தகவல் படி, அவரை கொலை தான் செய்திருக்கக்கூடும் என்று காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.


அதே போல புதிய திருப்பமாக ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் அவரது தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியது. அதில் ஜெயக்குமாரின் முகம், கழுத்து, கை, கால்கள் என அனைத்திலும் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு இருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டபடி வேறொரு இடத்தில் ஜெயக்குமாரை இரும்பு  கம்பிகளால் கை, கால்கள் கழுத்தை கட்டி கொலை செய்து பின் அவரது வீட்டு தோட்டத்தில் எரித்து சென்றிருக்கலாம் எனவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவது  குறிப்பிடத்தக்கது.