சிட்டிசன் படத்தில் 'அத்திப்பட்டி' என்ற ஒரு கிராமமே இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கும். அது படக்கதை. ஆனால் நிஜத்திலும் இந்திய வரைபடத்திலிருந்து காணாமல்போகும் விளிம்பில் இருக்கிறது ஒரு கிராமம்.- அதுதான் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் மீனாட்சிப்புரம்..!




தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்து உள்ளது மீனாட்சிபுரம் என்ற கிராமம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269.  தற்போதைய மக்கள்தொகை எண்ணிக்கை ஒன்றே ஒன்று. மற்றவர்கள் எல்லாம் எங்கு சென்றார்கள்? ஏன் ஊரை காலி செய்தார்கள்? தனியாக வசிக்கும் அந்த ஒற்றை மனிதர் யார்? கள நிலவரம் அறிய மீனாட்சிபுரம் கிராமத்துக்கு சென்றோம். 


நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மீனாட்சிபுரம். மீனாட்சிபுரத்துக்கு முன்னதாக இருக்கும் ஊர் செக்காரக்குடி. அங்குகூட மக்கள் கணிசமாக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள். செக்காரக்குடியில் இருந்து மேல செக்காரக்குடி சென்று அங்கிருந்து மானாவாரி பயிர்களுக்கு இடையே பயணிக்கிறது மீனாட்சிபுரத்தின் சாலை. ஆள் அரவமற்ற தனித்த சாலையில் சென்றால் வந்துவிடுகிறது மீனாட்சிபுரம். இதற்கு அடுத்து எந்த ஊருக்கும் செல்வதற்கும் பாதை கிடையாது. 





உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது கிராமம் முழுவதும் மயான அமைதி, திரும்பும் திசையெங்கும் கைவிடப்பட்ட வீடுகள், ஆட்கள் இல்லாததால் வீட்டிற்குள்ளும், வாசலிலும் முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. பல வீடுகள் அந்தரத்தில் தொங்கி இடியும் நிலையில் உள்ளன, ஒருசில வீடுகள் இடிந்து நொறுங்கிக் கிடக்கின்றன; சில வீடுகளில் மேற்கூரையே இல்லை. மக்கள் பொதுவாக பயன்படுத்திய ஒரு பெரிய ஆட்டு உரல் மட்டும் அநாதையாக கிராமத்தின் மையப்பகுதியில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. 


குழந்தைகள் துள்ளித்திரிந்து கல்விப் பயின்ற ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தான் நம்மை கிராமத்திற்குள் வரவேற்கிறது. ஆள் அரவமற்ற வீட்டு கூரைகளில் அமர்ந்திருந்த மயில்கள் நமது வண்டி சத்தத்தை கேட்டவுடன் றெக்கை படபடக்க பறந்து போனது, மக்கள் கூடிக் கண்டுகளித்த பொது தொலைக்காட்சி ஒன்று வெறுமையை கப்பிக்கொண்டு காட்சியளித்தது.  இப்படியாக, வாழ்ந்த மக்களின் நினைவுகளை மட்டுமே  அசைப் போட்டபடி மவுனியாக நிற்கிறது அந்த மீனாட்சிபுரம். 






ஆனாலும் எஞ்சியிருக்கும் ஒன்றை மனிதருக்காக இன்னமும் அந்த கிராமம் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. கிராமத்தின் கடைசியில் ஒரு வீடு மட்டும் மனிதர் வசிப்பதற்கான அடையாளங்களை கொண்டு இருக்கிறது. மீனாட்சிபுரம் கிராமம் தமிழ்நாடு அரசின் வரைப்படத்தில் இன்னமும் நிலைத்திருப்பதற்கு காரணகர்த்தாதான் அந்த வீட்டில் வசிக்கும் ஒன்றை மனிதர் கந்தசாமிதான். அவருக்கு வயது இப்போது 73.


பள்ளிக்கூடத்தில் இருந்து மேக்கால போகும் சாலையில் மேல்பக்கம் வசித்து வருகிறார் கந்தசாமி, வீட்டின் வாசலில் தண்ணீர் நிரப்பப்பட்ட வாலி, தலையணையுடன் கூடிய திண்ணை படுக்கை என இருந்தது அந்த தனியொரு ராசகுமாரனின் வீடு. அங்கேபோய் அமர்ந்தோம். ஆள் இல்லை. சற்று நேரத்தில்  பக்கத்து ஊருக்கு போய் தட்டுமுட்டு சாமான் வாங்கிட்டு வருவதாக கூறி தனது இருச்சக்கர வாகனத்தில் வந்தார் கந்தசாமி, வாசலில் அமைந்துள்ள தூணில் இருந்த கயிற்றை கொண்டு வண்டியை கட்டிய அவர், தாக்கோளை கொண்டு வீட்டை திறந்ததும் அவருக்காக காத்திருந்த குட்டி நாய் நம்மை வாலாட்டி வரவேற்றது.





 

 


அவரிடம் பேச்சை கொடுத்தோம்,   கிராமத்தின் நினைவுகளை ஏக்கம் கலந்த புன்முறுவலுடன் அசைப்போட்டு பேசத் தொடங்கினார். 


‘’சொந்தபந்தங்களோட, சொத்து சுகங்களோட, குழந்தைங்க சிரிப்பு சத்தத்தோட, தினந்தினம் நிறைஞ்ச பண்டிகையோட இருந்த கிராமம்தான் தம்பி இந்த மீனாட்சிபுரம். சுமார் ஐநூறு வருஷமா மக்கள் வாழ்ந்து வந்துருக்காங்க இங்க. என் தாத்தா, அப்பா, நான் எல்லோருமே இந்த கிராமத்துல பிறந்து வளர்ந்தவங்கதான். சுத்தி இருக்கிற ஏழு கிராமங்களுக்கு மீனாட்சிபுரம் தான், தாய் கிராமம். சுமார் 300 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்த கிராமம். ஆறேழு வருஷத்துக்கு முன்னாடிவரை கூட, இங்க 150 குடும்பங்கள் இருந்தது. 


பொங்கல் பண்டிகை சமயம் எங்க கிராமமே களைகட்டும். பானைகள்ல பொங்கலிட்டு, விளையாட்டு போட்டி, ஆட்டம், பாட்டம் கொண்ட்டாட்டம்னு... அந்த மகிழ்ச்சி குரல் இன்னமும் என் காதுகள்ல எதிரொலிக்குது. தீபாவளி பண்டிகைக்கு சொந்தகாரங்க இங்க உள்ளவங்க வீட்டுக்கு வந்து பட்டாசு வெடித்து கொண்டாடிட்டு போவாங்க. சண்டை, சந்தோஷம், துக்கம், விழா காட்சிகள்.. என சகலத்தையும் பார்த்த என் கிராமம், இப்ப தனித்தீவா மாறிக்கிடக்குது என சொல்லி அமைதியானர்.




பின்னர் மீண்டும் மெல்ல பேசத் தொடங்கிய அவர், மக்கள் எல்லோரும் ஊரை காலி பண்ணதுக்கு காரணம் தண்ணீர் பஞ்சமும், வேலைவாய்ப்பு இல்லாததும்தான். எங்க கிராமம் வானம் பார்த்த பூமி. மழையை நம்பிதான் மக்கள் வாழ்ந்து வந்தாங்க. விவசாயத்தையும், குடிநீரையும் மழை தண்ணீர்தான் பூர்த்தி செஞ்சது. மழை பெய்யலனா ஊர் பஞ்சமாயிடும். 


பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் மழை ஓரளவு கைகொடுத்து எங்க வாழ்வாதாரம் பரவாயில்லாம இருந்தது. பிறகு ஆண்டுக்கு ஆண்டு மழை கம்மியானது. அதனால விவசாயம் பொய்த்துப் போச்சு. குடிதண்ணீருக்கு அலைஞ்சு திரிஞ்சோம். இங்க இருந்து 5 கி.மீ. நடந்து தண்ணீய சுமந்து கொண்டு வருவோம். பஸ் வசதியும் கிடையாது. 


மக்கள் பஞ்சம், பட்டினின்னு ரொம்பவே  கஷ்டப்பட்டுப் போனாங்க. அதுல இருந்து ஒருத்தர் ஒருத்தரா ஊரை காலி பண்ண ஆரம்பிச்சாங்க. சொந்த வீடு வாசல், விவசாய நிலம் எல்லாத்தையும் அப்படி அப்படியே விட்டுட்டு போனவங்கதான். திரும்ப வரவே இல்லை. மழை பெய்ஞ்சு ஊர் செழிப்பானா திரும்ப வந்துரலாம்ன்னு என்ற நம்பிக்கையில் போனவங்ககூட இன்னமும் திரும்பவே இல்லை. 


எட்டு வருசத்துக்கு முன்னாடி என்னைத் தவிர எல்லோரும் காலி பண்ணிட்டு போயிட்டாங்க. போனவங்க யாரும் திரும்பி எட்டிகூட பார்க்கல. ஒருசிலர் மட்டும் வாரத்துல இருநாள் இங்க இருக்கிற அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வருவாங்க. இப்போ அதுக்கூட இல்லாமல் வைகாசி திருவிழாவிற்கு வந்து செல்கின்றனர், திருவிழாவின் போது தற்காலிக பந்தல் போட்டு வைப்போம், வந்து இருந்து திருவிழா கொண்டாடிட்டு போனா, அடுத்த வைகாசிக்கு தான் வருவாக என ஆட்களை தனது நினைவுகளில் அசைபோடுகிறார் கந்தசாமி.


மக்கள் போன வரைக்கும் அரசாங்கம் குடிதண்ணீர், சாலை வசதி எதுவும் செய்துத்தரல. இப்ப போன மக்கள் திரும்ப வரணும் என்கிறதுக்காக தண்ணீர் தொட்டி, அடிபம்பு, தெருவிளக்கு வசதிகள் செஞ்சு கொடுத்துருக்காங்க. இதை முன்னாடியே செஞ்சிருந்தா மக்கள் யாரும் ஊரை விட்டு போயிருக்க மாட்டாங்க என கூறும்போதே கண் கலங்குகிறது அவருக்கு.  இப்ப எல்லாரும் அங்கயும் இங்கயுமா செட்டிலான பிறகு மறுபடியும் எப்படி வருவாங்க? நிறைய வீடுகள் இடிஞ்சு போயிருச்சு. எஞ்சியிருக்கிற கொஞ்ச வீடுகளும் இடிந்து விழுற நிலையில்தான் இருக்குது. 


அடிப்படை வசதிகள் செஞ்சு கொடுத்திருந்தாலும் வாழ்வாதரத்துக்கு வழி வேணுமே. அதுக்கு என்ன பண்ணுவாங்க மக்கள்?  என் மனைவி வீரலட்சுமி 16 வருஷத்துக்கு முன்னாடி இறந்து போயிட்டாங்க. ரெண்டு  மகன்கள், ரெண்டு மகள்கள். அதுல ஒரு மகன் மட்டும் அப்பப்போ செலவுக்கு பணம் கொடுத்து உதவுறான். 





வீட்டில் பின்புறத்தில் ரேக்ளா வண்டியை நிறுத்தி இருக்கிறார், வித்துடலாம்னு சொன்னேன், மவன் தான் வேண்டாம்னு சொல்லிட்டான் என ஆசையோயோடு பேசும் அவர், ரேசன் கார்டு, வோட்டு அட்டை எல்லாம் எனக்கு இருக்கு, ஆனா இங்க தான் யாருமிமில்லை என்று சொல்லிவ்ட்டு ஊர் கோடியை பார்த்து வெறித்து நிற்கிறார்.


எனக்கு இந்த கிராமத்தை விட்டு பிரிய மனமில்லை. வேற எங்கேயும் போக வழியும் இல்லை. நான் சாகுறதுக்குள்ள போன மக்களில் கொஞ்சம் பேராவது இங்க மீண்டும் குடிபெயர்றத பார்க்கணும். அத மட்டும் பாத்துட்டா போதும். அதைதான் சாமிக்கிட்ட தினந்தினம் வேண்டியிட்டு இருக்கேன். காரு, பைக் சத்தம் கேட்டா சின்னப்புள்ள மாதிரி ஓடிப்போய், போன யாரோ திரும்பி வந்துட்டாங்க என்ற ஆவலில் பார்ப்பேன். இந்த கட்டை இந்த ஊர விட்டு எங்கயும் போகாது. என் உயிர் இங்கதான் போகனும் என கண்கள் மின்ன சொல்லும் கந்தசாமியின் கதையை கேட்கும் நமக்கே கண்கள் கலங்குகின்றன.


மீனாட்சிபுரம் கிராமத்தை விட்டுச்சென்ற கந்தசாமியின் மகன் பாலாவிடம் கேட்டபோது, இப்ப நான் காசிலிங்கபுரத்துல மனைவி, குழந்தைகோடு வசித்து வாரேன்,  கிராமத்துல தான் அஞ்சாம் கிளாஸ் படிச்சன், எல்லோரும் போன பிறகு எங்க ஐயாவையும் வாங்க அங்கிட்டு போயிடுவோம்னு கூப்பிட்டேன், அவுக இங்கயே இருக்க போவதாக சொல்லிட்டாக, அப்பப்போ மக்கள்மாரை கூப்பிட்டு வந்து அப்பாவ பார்த்துட்டு தேவையானத வாங்கி கொடுத்துட்டு போவேன் என்கிறார்.


இது மீனாட்சிபுரத்தின் கண்ணீர் கதை மட்டுமல்ல, கடைசி கதையும்கூட. கந்தசாமி இருக்கும்வரை மீனாட்சிபுரம் இருக்கும். மீனாட்சிபுரம் எப்போது வரை இருக்கும் என்பது அரசின் கையில்தான் உள்ளது. நகர்ப்புற கட்டமைப்புக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை கிராமப்புறத்துக்கும் அரசு கொடுக்க வேண்டும். தவறினால் இப்படி பல ‘மீனாட்சிபுரங்கள்’ தொலைந்தால் காந்தியின் கிராம ராஜ்ஜியமும் கனவாகி போகும் நிலை.. விழிக்குமா அரசு..?