சென்னை-கன்னியாகுமரி சாலைப் பயணிகளைச் சாத்தூர் பேருந்து நிறுத்தம், 'சாத்தூர் சேவு' 'சாத்தூர் சேவு' என்று கூவி வரவேற்கும். வாங்கித் தின்போர் உணர்வர் சாத்தூரின் பெருமைக்கு அந்தச் சேவும் நிச்சயம் ஒரு காரணம். முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் சாத்தூர் காரச்சேவை ருசித்து பாராட்டியுள்ளனர்.

 

சேவு வகைகளில் நயம் சேவு, நடப்பு சேவு, காரா சேவு, இனிப்பு சேவு, சீரக சேவு, மிளகு சேவு, சீனி, பட்டர் சேவு, குச்சி சேவு, கருப்பட்டி சேவு என பல வகைகள் உள்ளன. நடப்பு சேவு சிறு குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் காரம் குறைவாக இருக்கும். காரச்சேவு காரம் சேர்த்து தயாரிக்கப்படுவதால் பெரியவர்கள் விரும்பி உண்ணும் வகையில் உள்ளது. சற்று தடிமனுடன் கடுமையான காரத்தன்மையுடன் தயாரிக்கப்படும் மிளகு சேவு, சாப்பாட்டுடன் சேர்த்து அனைவரும் உண்ணும் வகையில் உள்ளது.



 

பாரம்பரியமிக்க சாத்தூர் காரச்சேவின் சுவைக்கு காரணம் அப்பகுதியில் ஓடும் வைப்பாறு ஆற்றின் நீர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் மிளகாய் வத்தலின் காரத்தன்மை தான் முக்கிய காரணம் என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். சூரியகாந்தி எண்ணெய்க்கு பதிலாக கடலை எண்ணெய் பயன்படுத்துவதாலும் சாத்தூர் சேவுக்கு ருசி அதிகம். இந்த காரச்சேவின் ருசிக்கு தரமான சேர்மானப் பொருட்களும், சேவு தயாரிப்பவர்களின் பாரம்பரிய கைவண்ணமும் மற்றொரு மிக முக்கியமான காரணம் ஆகும்.



 

கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்ப்பொடி, கடலை எண்ணெய், சீரகம், வெங்காயம், கொடைக்கானல் வெள்ளை பூண்டு அல்லது கோத்தகிரி பூண்டு,  மானாவாரி நிலங்களில் இருந்து வரும் கார வத்தல், தூத்துக்குடி கல் உப்பு எல்லாத்தையும் முறையாக சேர்த்த கலவை தான் சேவின் ருசி. கலவை மாவைக் குச்சி குச்சியாகப் பிழிவதும், பக்குவான நிலையில் வேகவிட்டு எடுப்பதும் இதன் தனி சிறப்பு. 

 

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நேரங்களில் சாத்தூரில் சேவு தயாரிக்கப்படும் பணி மும்முரமாக நடைபெறும். தலைத்தீபாவளி கொண்டாடும் திருமணத் தம்பதிகளுக்கும் சீர் பலகாரமாக இனிப்புகளுடன் சாத்தூர் சேவை வாங்கிச் செல்வதும் இந்த பகுதியில் வழக்கமாக உள்ளது.  சேவின் மணமும் மொறமொறப்பும் சாத்தூருக்குப் பெருமை. பலகார வகை எத்தனை வந்தாலும், சாத்தூர் சேவுக்கான மவுசு மட்டும் நூற்றாண்டுகளை கடந்து நிலைத்து நிற்கிறது.