நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், கீதா ஜீவன் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வரும் பணிகள் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என். நேரு கூறும் பொழுது, முதலமைச்சரின் அறிவுறுத்தல் என்னவென்றால் நீங்கள் சொல்வது போல ஒரே ஒரு கவுன்சிலர் தவறு செய்திருந்தாலும் அவர் மீது நடடிக்கை எடுக்கப்படும் என்றிருக்கிறார். அப்படி குறிப்பிட்டு சொல்லும் படி இல்லாமல் அவர்கள் திருந்தி கொள்ள வேண்டும் இல்லையென்றால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார். இதை விட கூடுதலாக, கவுன்சிலர்கள் தவறாக நடந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய சட்டத்தில் அதிகாரம் இருக்கிறது என தெரிவித்தார்.




தொடர்ந்து பேசிய அவர், நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள 13 கடற்கரை கிராமத்திற்கு 25 கோடி மதிப்பில் பொன்னன் குறிச்சி தனி  குடிநீர் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராம மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் உள்ளது. இதற்கு மாற்று திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சியின் அரியநாயகபுரம் கூட்டு குடிநீர் திட்டம் ஒரு மாதத்தில் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். நெல்லை மாநகராட்சியில் தொய்வு நிலையில் இருக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை மறு மதிப்பீடு செய்து திட்டம் தயாரித்து ஒப்பந்தம் கோரப்படும். தமிழகம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் விரைவில் நிரப்பப்படும். சாதாரண பணியிடங்கள் புற ஆதார அடிப்படையில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 935 கோடியில் மழை நீர் வடிகால் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கூடுதலாக 3000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் 84 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வந்தாலும் அதனை முழுமையாக நிறைவு செய்வதில் பல்வேறு சவால்களும், சிக்கல்களும் நிலவி வருகிறது என தெரிவித்தார்.


இந்த கூட்டத்தில்  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலாளர் சிவதாஸ்மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா,  பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தெட்சணாமூர்த்தி, மேயர்கள் சரவணன், ஜெகன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞானதிரவியம், தனுஷ்.எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், ராஜா, மார்கண்டையன், சண்முகையா, பழனிநாடார், சதன்திருமலைக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.