நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்து உள்ளது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக விளங்கும் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர்..  ஆண்டு முழுவதும் இங்கு ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருப்பதினால் சுற்றுலா பயணிகளின் வருகை எப்பொழுதுமே இருக்கும்.


இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில்  மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவியும் சேதம் அடைந்தது. அங்குள்ள தடுப்பு கம்பிகள் அனைத்தும் வெள்ளைத்தில் அடித்து சொல்லப்பட்டன. இதனால் மணிமுத்தாறு அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. இதனையடுத்து சேதம் அடைந்த பகுதிகளில்  பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக அருவியில் குளிக்க  சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.


இந்த சூழ்நிலையில் தற்பொழுது கோடை விடுமுறை காலத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் உடல் வெப்பத்தை தணிக்க நீர்நிலைகளைத் தேடி பொதுமக்கள் செல்கின்றனர். புகழ்பெற்ற குற்றால அருவிகளின் நீர்வரத்து இல்லாததால் மணிமுத்தாறு அருவியை தேடி பொதுமக்கள் வருகை புரிந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வந்தனர். இந்த நிலையில் வனத்துறை கடந்த நான்கு மாதங்களாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு இன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் நாள் கூட்டம் குறைவாக இருந்தாலும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர். தொடர்ந்து கோடையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மணிமுத்தாறு அருவி கலைக்கட்ட துவங்கியுள்ளது.