திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் மையம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து 29 குழந்தைகள் உள்ளிட்ட 36 பேர் படுகாயம் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இதில்  நரிக்குறவர் இன குழந்தைகள் படித்து வருகின்றனர்.  இப்பள்ளியில் பயிலும் 29 மாணவிகள் ஐந்து ஆசிரியைகள் ஒரு உதவியாளர்  ஆகியோர் தனியார் பள்ளி வேனை  வாடகைக்கு எடுத்து திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க வந்துள்ளனர்.


 வேன் திருநெல்வேலி நகர் பகுதியில் உள்ள மாவட்ட தொழில் மையம் அருகே வந்தபோது ஒரு திருப்பத்தில்  திரும்பி உள்ளது. அப்போது வேனின் பின்பக்க ஆக்சில்  முறிந்து வேன் சாலையின் வலது பக்கம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உதவியாளர் மற்றும் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் தங்கமுத்து ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது.


இந்த விபத்தைப் பார்த்தவர்களும் விபத்து குறித்து அறிந்தவர்களும் உடனடியாக வேனில் இருந்த குழந்தைகளை மீட்டனர். அவ்வழியாக பணிக்கு சென்று கொண்டிருந்த பாளையங்கோட்டை வட்டாட்சியர் சரவணன் தனது வாகனத்தை நிறுத்தி குழந்தைகளை உடனடியாக மீட்டு  தனது வாகனத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணியினை துரிதப்படுத்தினார். அதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாகவும் தீயணைப்பு வாகனம் மூலமாகவும் குழந்தைகள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஒரு சில குழந்தைகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி தலைமையில் மருத்துவர்கள்  காயம் அடைந்த குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு திருநெல்வேலி கோட்டாட்சியர் கார்த்திகாயினி,  காவல்துறை துணை ஆணையர் அனிதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் . பள்ளிக்குழந்தைகள் வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்  திருநெல்வேலி பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது


இதனிடையே கடந்த 3  மாதங்களுக்கு முன்புதான் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில்  வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.  அரசு வகுத்துள்ள விதிமுறைகள் எதுவும் இந்த வாகனத்தில் இல்லை  என்ற நிலையில் இந்த வாகனத்திற்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என்பது  பொதுமக்கள் எழுப்பும் கேள்வி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.