நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த அலவந்தன்குளம் மற்றும் அதனையொட்டி உள்ள பள்ளிக்கோட்டை, நெல்லை திருத்து உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுவாக ஒரு கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து தனித்தனியாக அமைக்கப்பட்ட பைப் லைன் மூலம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அலவந்தான் குளம் கிராமத்தில் மக்கள் தொகை அதிகரித்ததன் காரணமாக தனி பைப்லைன் அமைக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வந்தது. ஒரே வேளையில் 3 கிராமங்களுக்கும் தண்ணீர் சென்று கொண்டிருந்த சூழலை மாற்றி புதிய பைப்லைன் அமைக்க பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் அந்தத் திட்டத்தினை செயல்படுத்த பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் புதிய பைப் லைன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே புதிய பைப் லைன் அமைக்க வேண்டும் எனக்கூறி அலவந்தான் குளம் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.


இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி புதிய பைப்லைன் அமைப்பதற்கு இன்று பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை திருத்து மற்றும் பள்ளிக்கோட்டை கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மானூர் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் புதிய பைப்லைன் அமைக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து ஒரு குழுவினர் அங்கிருந்து மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். மற்றொரு பிரிவை சேர்ந்த பொதுமக்கள் புதிய பைப் லைன் அமைக்கும் ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இந்த நிலையில் 2 குழுவாக போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் குண்டுகட்டாக வலுக்கட்டாய்படுத்தி கைது செய்தனர்.  அப்போது ஜேசிபி இயந்திரம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பெண் போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, போர்க்களம் போல அப்பகுதி காட்சியளித்த நிலையில் மூதாட்டி ஒருவரை அப்புறப்படுத்தும் போது அவர் கீழே விழுந்து மயக்கமடைந்தார். 


தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்துள்ளதுடன் புதிய பைப் லைன் அமைக்கும் பணி பலத்த பாதுகாப்புடன் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் புதிய பைப் லைன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஒரு சாருக்கு ஆதரவாக காவல்துறையும் அரசு செயல்பட்டு வருவதாக கூறி அதனை கண்டிக்கும் விதமாக அடுத்த கட்டமாக வாக்காளர் அடையாள அட்டைகள், ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாகவும், தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் முடிவு செய்திருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். நெல்லை அருகே புதிய பைப் லைன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.