தூத்துக்குடியில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் இணைந்து என்.டி.பி.எல். அனல்மின்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அனல்மின்நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 2 மின்உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன.




தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் உற்பத்தியில் 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பிரிவுகள் மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்திற்கு 387 மெகாவாட் மின்சாரமும், கர்நாடகத்திற்கு 157.9 மெகாவாட் மின்சாரமும், புதுச்சேரிக்கு 9.5 மெகாவாட் மின்சாரமும் , ஆந்திர மாநிலத்திற்கு 254.6 மெகாவாட் மின்சாரம், கேரள மாநிலத்திற்கு 72.5 மெகாவாட் மின்சாரமும் மத்திய மின் பகிர்மானம் மூலம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.இதில் 118.5 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்படாதது என்பது குறிப்பிடத்தக்கது.




தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த அளவில் சூப்பிரவைசர் உள்ளிட்ட பணிகளில் மட்டுமே நிரந்தர பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்த நிலையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு( சி.ஐ.டி.யு) சார்பில் என்.டி.பி.எல் நிர்வாகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்.எல்.சி. அனல்மின்நிலையத்தில் வழங்குவது போன்று என்.டி.பி.எல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும்  ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ, பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இந்த போராட்டம்  2-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மினஊழியர் மத்திய அமைப்பு என்.டி.பி.எல் கிளை செயலாளர் அப்பாத்துரை, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாநில செயலாளர் ரசல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ராஜா, உப்பு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.சங்கரன் உள்பட திரளான ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 




இதனால் என்.டி.பி.எல் அனல்மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. போதிய ஊழியர்கள் இல்லாததால் படிப்படியாக மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதனால் 560 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் என்.டி.பி.எல். நிர்வாகம் சார்பில் மாற்று தொழிலாளர்கள் சிலரை அனல்மின்நிலையத்துக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வழிமறித்து திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்த வேலைநிறுத்த போராட்டத்தை முன்னிட்டு என்டிபிஎல் அனல்மின் நிலைய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.